அடுத்த ஜனாதிபதி கிருஷ்ணகாந்த்?
டெல்லி:
அடுத்த இந்திய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வரும் ஜூலை 15ம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது.
மக்களவை, மாநிலங்களை எம்.பிக்களும், அனைத்து மாநில எம்.எல்.ஏக்களும் வாக்களித்து ஜனாதிபதியைத்தேர்ந்தெடுப்பர். ஒவ்வொரு மாநில எம்.எல்.ஏவின் ஓட்டுக்கும் அம் மாநில மக்கள் தொகையைப் பொறுத்து மதிப்புதரப்படும்.
இந்தத் தேர்தல் அடுத்த மாதம் 15ம் தேதி நடக்கும். 18ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என இந்தியதலைமைத் தேர்தல் கமிஷனர் லிங்டோ இன்று அறிவித்தார்.
தேர்தலில் போட்டியிட இம் மாதம் 11ம் தேதி முதல் 25ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். 26ம் தேதி மனுக்கள்பரிசீலிக்கப்படும். மனுக்களை வாபஸ் பெற 28ம் தேதி கடைசி நாள்.
இப்போதைய ஜனாதிபதி கே.ஆர். நாராயணனின் பதவிக் காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது.
அடுத்த ஜனாதிபதியாக நாராணனையே தேர்வு செய்ய வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருந்தது.ஆனால், இதை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஏற்கவில்லை.
இதனால் மீண்டும் போட்டியிட நாராயணன் விரும்பவில்லை.
இந் நிலையில் மகாராஷ்டிர ஆளுநர் பி.சி.அலெக்சாண்டரை ஜனாதிபதியாக்க பிரதமர் வாஜ்பாய் விரும்பினார்.ஆனால், இதை காங்கிரஸ் எதிர்க்கிறது. அவரை நிறுத்தினால் காங்கிரஸ் வேறு வேட்பாளரை நிறுத்தும் என்றுதெரிகிறது.
நாட்டின் உயர்ந்த பதவிக்கு போட்டியை ஏற்படுத்த மத்திய அரசு விரும்பவில்லை. அனைவரும் இணைந்து தான்ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது.
இதனால் தங்களுக்கும் இல்லாமல், காங்கிரசுக்கும் இல்லாமல் பொது வேட்பாளராக துணை ஜனாதிபதிகிருஷ்ணகாந்தை நிறுத்தலாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கிருஷ்ணகாந்தை நிறுத்தினால் காங்கிரஸ் ஆதரவும் கிடைக்கும் என்று தெரிகிறது. நேற்று டெல்லியில் பிரதமரைசந்தித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் கிருஷ்ணகாந்தை ஜனாதிபதியாக்க வேண்டும் என்றுவற்புறுத்தினார். கிருஷ்ணகாந்த் ஆந்திரவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளும் தேசிய ஜனநாகக் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் அடுத்த ஜனாதிபதி குறித்து முடிவு செய்ய பிரதமருக்குமுழு உரிமை தந்துவிட்டன.
அடுத்த வாரம் டெல்லி வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமும் ஜனாதிபதி தேர்தல் குறித்து வாஜ்பாய்ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.