"ஜனாதிபதி" அப்துல் கலாம்!
(அலைகளில் வெளியான இன்னொரு சமீபத்திய கட்டுரை)
- ரெங்கராஜ்
மீண்டும் செய்தித்தாள்களில் அடிபட ஆரம்பித்திருக்கிறார் அப்துல் கலாம். இந்த முறை வேறொரு விசேஷத்திற்காக.
ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் மிகப் பெரியபொறுப்பு இந்தியாவுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகள் யாரை புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யலாம் என்று அலைபாய்ந்துகொண்டுள்ளன.
தங்களுக்கு வேண்டியவரை ஜனாதிபதி பதவிக்குக் கொண்டு வந்தால்தான் பிற்காலத்திற்கு நல்லது என்ற எண்ணத்தில் ஒவ்வொருஅரசியல் கட்சியும் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளன.
கே.ஆர்.நாராயணனையே மீண்டும் ஜனாதிபதியாக்குவோம் என்கிறது காங்கிரஸ். இதை கம்யூனிஸ்ட்கள் ஆதரிக்கின்றனர்.இல்லை, இல்லை அவர் வேண்டாம், பி.சி.அலெக்சாண்டர்தான் சரியானவர் என்கிறது பா.ஜ.க. மற்றொருபுறம் பரூக் அப்துல்லா,கரண் சிங், நரசிம்ம ராவ், ஜோதிபாசு, வாஜ்பாய், நஜ்மா ஹெப்துல்லா என பலரது பெயர்களை அவர்களது ஆதரவாளர்கள்,அவர்களுக்கு வேண்டியவர்கள் பரப்பி விட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தான் சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவ் பிரதமரை நேரில் சந்தித்து ஒரு யோசனையை முன்வைத்தார். அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கினால் என்ன? என்று அவர் கேட்க வாஜ்பாயினால் உடனே பதில் சொல்லமுடியவில்லை.
தனது கட்சியினருடன் பேசிவிட்டுச் சொல்வதாகக் கூறி அனுப்பிவிட்டார்.
வாழும் காலத்திலேயே பாரத ரத்னா விருதைப்பெற்ற இந்த இந்திய ரத்தினத்தை ஜனாதிபதியாக்கினால் என்ன என்கிறார் முலாயம்சிங். இதை மத்திய அமைச்சர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
இந்தியாவின் ஏவுகணைத் திட்டங்களின் தந்தை எனப் போற்றப்படுபவர் அப்துல் கலாம். ராமேஸ்வரம் என்ற சாதாரண கடற்கரைஊரிலிருந்து கிளம்பிய இந்த ஏவுகணை, இன்று இந்தியாவின் பெருமையை அக்னி என்ற பெயரில் உலகுக்கு பறை சாற்றியுள்ளது.நம்மை கிள்ளுக் கீறையாகப் பார்த்து வந்த நாடுகளை மூக்கில் விரல் வைக்க வைத்தவர் அப்துல் கலாம்.
ஆராய்ச்சி, ஆய்வு என்ற ஆண்டுகளையும், வயதுகளையும் தொலைத்து விட்ட கலாமுக்கு கல்யாணம் செய்து கொள்ளும்எண்ணமும் நேரமும் கிடைக்கவில்லை. இந்தியாவுக்காக தனது இளமையைத் தியாகம் செய்து விட்ட கலாம், ஓய்வு பெற்ற பிறகும்கூட ஓயாமல் இந்தியா முழுவதும் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.
என்னைப் போல ஓராயிரம் கலாம்கள் இந்தியாவுக்குத் தேவை என்ற தனியாத தாகத்தால் இளம் மாணவர்களை சந்தித்துஅவர்களின் அறிவுப் பசியை, ஆய்வு வேட்கையைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார் கலாம்.
ஆங்கிலத்தில் ஒருபக்கம் புலமை, மறுபக்கம் திருக்குறளின் மேல் காதல், இன்னொரு பக்கம் தமிழ் கவிதைகள், அடுத்து என்னஏவுகணை விடலாம் என்ற சிந்தனை. இத்தனைக்கும் மத்தியில் இந்தியாவின் எதிர்காலம் குறித்த கவலை. இதுதான் கலாம்.
இது குறித்து முலாயம் சிங் யாதவுடன் ஒரு குட்டி பேட்டி:
ஒரு சுத்தமான இந்தியர் என்ற அடையாளம் கண்டிப்பாக அப்துல் கலாக்கு பொருந்தும். நாட்டின் உயரிய விருதான பாரதரத்னாவை பெற்று அந்த விருதுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார் கலாம்.
சுயநலம் பாராது, ஓய்வை விரும்பாது, இந்தியாவைப் பற்றிய கவலையை மட்டுமே பிரதானமாக கொண்டு, வயதான காலத்திலும்காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஓடிக் கொண்டிருக்கும் இந்த இந்தியருக்கு ஜனாதிபதியாகும் தகுதி உள்ளது என்பதை யாரும்மறுக்க முடியாது.
அப்துல் கலாமை ஜனாதிபதியாக்குவது பல பெருமைகளை இந்தியாவுக்குத் தரும். இதுவரை இருந்து வந்த ஜனாதிபதிகள்அனைவரும் அரசியல்வாதிகளாக இருந்தவர்கள். எனவே அவர் எந்தக் கட்சியில் இருந்தாரோ, அந்தக் கட்சியைச்சேர்ந்தவராகவே, ஜனாதிபதியான பின்னரும் கூட பார்க்கப்படுகிறார். இதனால் சில முடிவுகளை எடுக்கும் போது அவருக்குஏதாவது ஒரு நிறம் கொடுக்கப்பட்டு விடுகிறது.
ஆனால், அரசியலில் இல்லாத ஒருவரை ஜனாதிபதியாக்கலாமே என்ற எண்ணம் வலுத்துள்ளது. அதற்குச் சரியான வேட்பாளராகஅப்துல் கலாம் இருப்பார் என்கிறார்கள். இந்தியாவுக்காக கலாம் ஆற்றியுள்ள பங்களிப்புக்கு சரியான பரிசாக ஜனாதிபதி பதவிஅமையும்.
கலாமை வேட்பாளராக அறிவித்தால் யாரும் அவரை எதிர்க்க மாட்டார்கள். கலாமின் தூய்மை, நேர்மை, தேசப்பற்று, அரசியல்சார்பற்ற தன்மை ஆகியவை அவருக்கு அனைத்துக் கட்சியினரின் ஆதரவையும் அவருக்குப் பெற்றுத் தரும் என்று முலாயம் சிங்கூறுகிறார்.
இந்த விவகாரத்தில் எல்லா கட்சிகளுமே பிரதமர் வாஜ்பாயின் முடிவுக்காக காத்திருக்கின்றன.