பெண்களை கேலி செய்து ஓ போட்டவர் அடித்துக் கொலை
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில், குடித்து விட்டு வந்து பெண்களைக் கேலி செய்து ஓ.. போடு பாட்டைப் பாடி கலாட்டாசெய்தவர் அடித்துக் கொல்லப்பட்டார்.
கூத்தம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிநேசன். இவர் தனது அக்காவின் வீட்டில் நடந்த ஒரு விசேஷ நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக புல்லாக ஊத்திக் கொண்டு வந்தார்.
போதை அதிகமானதில் உற்சாகத்தில் அங்கிருந்த பெண்களைப் பார்த்து ஓ. போடு பாட்டைப் பாடி ரகளை செய்துள்ளார்.
அவரது ரவுசு அதிகமாகவே அங்கிருந்த சிலர் அவரைத் தட்டிக் கேட்டனர். ஆனால் அவர்களை பழனி கண்டுகொள்ளவில்லை.அவர்களைத் திருப்பித் திட்டினார். தொடர்ந்து பெண்களைப் பார்த்து கேலி செய்து ஓ.. போடு பாடலைப் பாடி சில அசிங்கமான அங்கஅசைவுகளை செய்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் சண்முகம் ஆகிய இருவரும் பழனியைத் தாக்கினர். இவர்கள் மிகக்கடுமையாக அடித்ததில் போதையில் இருந்த பழனி அந்த இடத்திலேயே இறந்தார்.
இதையடுத்து இந்த இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்