வைகோ மீது பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு வழக்கு பதிவு
திருமங்கலம்:
மதிமுக பொதுச் செயலாளரான வைகோ மீது 1967ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பொடா சட்டத்தின் கீழ் தமிழகஅரசு இன்று வழக்கு பதிவு செய்துள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கடந்த ஜூன் 29ம் தேதி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ,விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் குற்றம் சாட்டி மத்திய அரசுக்கு தமிழக அரசு புகார் கடிதம்அனுப்பியுள்ளது.
தடை செய்யப்பட்ட புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசி வருவதை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதுஎன்றும் இதனால் வைகோவை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும்துணைப் பிரதமர் அத்வானிக்கு எழுதிய கடிதத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதற்கு ஆதாரமாக வைகோவின் பேச்சுக்கள் அடங்கிய வீடியோ கேசட் ஒன்றையும் அக்கடிதத்துடன் இணைத்துஅனுப்பியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.ஆனால் தமிழக அரசிடமிருந்து இது தொடர்பாக இதுவரை எந்தக் கடிதமும் வரவில்லை என்று மத்திய உள்துறைஅமைச்சர் ஐ.டி. சுவாமி நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில் வைகோவுக்கு எதிராக பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு இன்று அதிரடியாக வழக்குப் பதிவுசெய்துள்ளது.
வைகோ தவிர, திருமங்கலம் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த மதிமுக நிர்வாகிகள் வீர இளவரசன், பூமிநாதன்,மதுரை கணேசன், நாகராஜன், சிவந்தியப்பன், பி.எஸ்.மணியம், அழகு சுந்தரம் மற்றும் முன்னாள் எம்.பி.கணேசமூர்த்தி ஆகிய 8 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இ.பி.கோ. 120 (பி), 109 ஆகிய பிரிவுகள் மற்றும் பொடா சட்டத்தின் 2 மற்றும் 3 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேலு அளித்த புகாரின் அடிப்படையில் டி.எஸ்.பி. கர்ணன் இதற்கானமுதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தார். திருமங்கலம் போலீஸ் நிலையத்திலேயே இந்த வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இதையடுத்து வைகோ உள்ளிட்ட அனைவரையும் விரைவில் கைது செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
அநேகமாக வரும் 12ம் தேதி அமெரிக்காவிலிருந்து வைகோ இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அவர் இந்தியா வந்தவுடன் அவரைக் கைது செய்வதற்காக தனிப் படையே அமைக்கப்பட்டுள்ளதாக மதுரையில்இன்று போலீசார் தெரிவித்தனர்.
மதிமுக அவசரக் கூட்டம் ஒத்திவைப்பு:
இதற்கிடையே வைகோ உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மதிமுகவின்அவசரக் கூட்டம் நாளை சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மதிமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும்கூறப்பட்டிருந்தது.
ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்கள் காரணமாக இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மதிமுகதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் மதிமுகதலைவர்களில் ஒருவரான கணேசன் ஆகியோர் நாளை சென்னையில் இருக்க முடியாத காரணத்தால் வேறொருதேதியில் இந்த அவசரக் கூட்டம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
"மதிமுக வளர்ச்சி கண்டு ஜெ.வுக்கு பயம்":
இதற்கிடையே மதிமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கண்ணப்பன் நிருபர்களிடம் பேசுகையில்,
மதிமுக தோன்றிய நாளிலிருந்தே புலிகளை ஆதரித்து தான் பேசி வந்துள்ளது. அதிமுகவுடன் கூட்டணிவைத்திருந்த போது கூட எங்கள் கொள்கைகளில் எந்தவிதமான மாற்றமும் இருந்ததில்லை.
ஆனால் தற்போது அதிமுக கூட்டணியை விட்டு விலகி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் சேர்ந்த பிறகு,அதுவும் இத்தனை நாட்களுக்குப் பின்னர் ஏன் ஜெயலலிதா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்றுஎங்களுக்குப் புரியவில்லை.
மதிமுகவின் வேகமான வளர்ச்சியைக் கண்டு பயந்து போய் தான் அதிமுக அரசு இத்தகைய நடவடிக்கைகளில்இறங்கியுள்ளது என்று நினைக்கிறோம் என்றார் கண்ணப்பன்.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொடா சட்டத்தின் கீழ் தமிழகத்தில் வழக்குப் பதிவுசெய்யப்படுவது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
"ஜெ. நேரடியாகக் கையாள்கிறார்":
இதற்கிடையே நேற்று சென்றிருந்த தமிழக உள்துறைச் செயலாளர் நரேஷ் குப்தா, வைகோவைக் கைது செய்வதுகுறித்து உள்துறை அமைச்சகத்திடம் பேசி வருவதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னை திரும்பிய நரேஷ் குப்தா நிருபர்களிடம் கூறுகையில்,
இவ்விஷயத்தை ஜெயலலிதாவே நேரடியாகக் கவனித்துக் கொள்கிறார். இதற்கும் நான் டெல்லி போனதற்கும்எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது.
தமிழகக் காவல்துறையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் ஆலோசிப்பதற்காகவேநான் டெல்லி சென்றிருந்தேன் என்றார் நரேஷ் குப்தா.