மதுரையை வாட்டும் தண்ணீர் பஞ்சம்
மதுரை:
மதுரை நகரி ல் குடிதண்ணீர் தட்டுப்பாடு மிகக் கடுமையாகி உள்ளது.
சரியான நேரத்தில் மழை பெய்யாததாலும், கோடை காலம் இன்னும் நீடித்து வருவதாலும் மதுரை நகரில் கடும் குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் மழை பெய்யாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகி விடும் என்றுதெரிகிறது.
வைகை அணையில் தண்ணீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளது. இதனால் வைகை அணையிலிருந்து மதுரைக்கு தண்ணீர்கொண்டு வர முடியாத நிலை உள்ளது.
இதனால் ஆங்காங்கே மக்கள் தெருவில் குதித்தும் போராட ஆரம்பித்துள்ளனர்.
தற்போது மதுரை நகரில் ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் மாநகராட்சி எல்லைப்பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வழங்கப்படுகிறது. பல இடங்களில் குடிநீர் வினியோகம் பல நாட்களாகநிறுத்தப்பட்டுவிட்டது. இதனால், பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபடுவது அன்றாடக் காட்சியாகிவிட்டது.
மதுரை நகருக்கு தினசரி 90 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை, ஆனால் இப்போது அணையில் மொத்தம் இருப்பதே 60மில்லியன் லிட்டர் தண்ணீர்தான் என்று மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.
அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு சென்னைக்கு ரயில், லாரி மூலம் வெளியிடங்களிலிருந்து குடிநீர் கொண்டு வந்தது போல,மதுரைக்கும் தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நிலைமை மிகவும் மோசமாகி வருவதால் அதிர்ந்து நிற்கும் அதிகாரிகள் வைகை அணை மற்றும் பெரியார் அணையில் வருணபகவானுக்கு பூஜை நடத்தினர். இதையடுத்து புதன்கிழமை சுமார் ஒரு மணி நேரம் அணைகளின் நீர்பிடிப்புப் பகுதியில் மழைபெய்தது.
மழை வேண்டி அண்ணா நகர் மைதானத்தில் இஸ்லாமியர்களும் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளனர்.
தண்ணீருக்கு உடனடியாக பொதுப்பணித்துறை ஏதாவது ஏற்பாடு செய்யாவிட்டால் மதுரைவாசிகள் நிலைமை படுமோசமாகிவிடும்.