சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை
சென்னை:
சென்னை தாம்பரம் பகுதியைக் கலக்கிய ஒரு ரவுடியை மற்றொரு ரவுடிக் கும்பல் நேற்றிரவு வெட்டிக் கொன்றது.
தாம்பரத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (24) என்ற அந்த ரவுடி ஒரு கொலை வழக்கில் கடந்த1997ல் கைது செய்யப்பட்டான். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அவன் விடுதலை செய்யப்பட்டான்.
இதே பகுதியைச் சேர்ந்த விநாயகம் என்ற ரவுடியைப் பிடிப்பதற்காக போலீசாருக்குக் கண்ணன் உதவியிருந்தார்.இதையடுத்து கண்ணனைக் கொல்வதற்குத் திட்டமிட்ட விநாயகத்தின் கூட்டாளிகள் அதற்குத் தகுந்த நேரத்தைஎதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு தன் வீட்டிலிருந்து கிளம்பிய கண்ணன், அருகிலுள்ள ஒரு டீக்கடைக்குச் சென்றார்.
இது தான் சமயம் என்று அப்போது திடீரென்று கண்ணனைச் சூழ்ந்து கொண்ட விநாயகத்தின் கூட்டாளிகள் நான்குபேர், அவனைக் கீழே தள்ளி விட்டு சராமாரியாகத் தாக்க முயற்சித்தனர்.
விபரீதத்தை உடனடியாகப் புரிந்து கொண்ட கண்ணன் கண்ணிமைக்கும் நேரத்தில் எழுந்து தன்னுடைய வீட்டுக்குஓட ஆரம்பித்தார். ஆனால் கொலை வெறிபிடித்த அந்தக் கும்பல் அவரை விடாமல் துரத்தியது.
தன் வீட்டுக்குள் ஓடி கண்ணன் ஒளிந்து கொண்ட போதிலும், அந்தக் கும்பல் வேகமாக வந்து அவனுடையவீட்டுக்குள் வைத்தே அவனை அரிவாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் வெட்டிச் சாய்த்து விட்டு ஓடிவிட்டது.
பலத்த வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்த கண்ணன் உடனடியாக சென்னை மருத்துவமனையில்சேர்க்கப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அங்கு கண்ணன் இறந்து விட்டான்.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து தாம்பரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து செந்தில், விஜி உள்பட நான்குகொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.