திருவாவடுதுறை ஆதீனத்தை கொல்ல முயற்சி?
திருவாவடுதுறை:
திருவாவடுதுறை ஆதீன மடாதிபதியைக் கொலை செய்ய முயன்றதாகக் கருதப்படும் 4 பேரைப் போலீசார் தேடிவருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறையில் திருக்கயிலாய பரம்பரை ஆதீனம்அமைந்துள்ளது. 14ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இதன் 23வது குருமகா சன்னிதானமாக சிவப்பிரகாச தேசிகபரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார்.
புகழ்பெற்ற திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கோவில்கள் மற்றும்சொத்துக்கள் உள்ளன.
நேற்று முன்தினம் இரவு வழக்கமான பூஜையில் கலந்து கொண்டு விட்டு, பக்தர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தார் சிவப்பிரகாச சுவாமிகள்.
அப்போது அவருடைய மெய்க்காப்பாளரான வரதராஜன் மாடியில் உள்ள மடாதிபதியின் படுக்கையறைக்குச்சென்றார். அந்த அறையின் அருகே அடையாளம் தெரியாத நான்கு பேர் நின்று கொண்டிருந்ததைப் பார்த்ததும்அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டவுடன் அந்த நான்கு பேரும் வேகமாகத் தப்பி ஓடிவிட்டனர்.இதையடுத்து மற்ற ஆதீன ஊழியர்களும் ஓடி வந்து அவர்களைத் தேடினர். ஆனால் அதற்குள் அந்த மர்மமனிதர்கள் எங்கோ ஓடி மறைந்து விட்டனர்.
அவர்கள் ஓடுவதற்கு முன் அந்த அறைக்கு அருகிலேயே விஷ ஊசி, தலையணை, கையுறைகள் மற்றும் கயிறுஆகியவற்றைப் போட்டு விட்டு ஓடியுள்ளனர்.
இவற்றையெல்லாம் பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனடியாகப் போலீசாருக்குத் தகவல்கொடுத்தனர். மோப்ப நாயுடன் விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
சிவப்பிரகாச சுவாமிகள் படுக்கையறைக்கு வந்தவுடன் அவரைக் கொலை செய்வதற்காகத் தான் அந்நபர்கள்வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில் அமைக்கப்பட்டுள்ள மடாதிபதியின் படுக்கையறைப் பக்கம் வெளி நபர்கள்யாரும் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது.
எனவே மடத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் தான் அங்கு வந்திருக்கக் கூடும் என்று போலீசார்சந்தேகப்படுகின்றனர். தப்பியோடிய நான்கு பேரையும் தேடும் பணியில் போலீசார் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.