தமிழக- கேரள மீனவர்கள் பயங்கர மோதல்: ஒருவர் பலி- போலீஸ் துப்பாக்கி சூடு
கொல்லம்:
கொல்லம் கடல் பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பாக தமிழ் மீனவர்களுக்கும் மற்றும் கேரள மீனவர்களுக்கும்இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு மீனவர் கொல்லப்பட்டார். இதையடுத்து கடற்கரையில்நிறுத்தப்பட்டிருந்த 100 படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடுநடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கேரள மாநிலம் கொல்லத்தில்குடியேறியுள்ளனர். இவர்களுக்கும் கேரள மீனவர்களுக்கும் இடையே மீன் பிடிப்பதில் பிரச்சனை இருந்துவருகிறது. அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கம்.
கடந்த சனிக்கிழமை வழக்கம்போல் கன்னியாகுமரி கொளச்சலைச் சேர்ந்த மீனவர்கள் கொல்லம் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இங்கு மீன் பிடிக்கக் கூடாது எனகொல்லம் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆனால் அப்பகுதி போலீசார் உடனடியாகத்தலையிட்டு மோதலைத் தவிர்த்தனர்.
இந் நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மீண்டும் மோதல் வெடித்தது. கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழகமீனவர்களை கேரள மீனவர்கள் பயங்கரமாகத் தாக்கினர். இதையடுத்து தமிழக மீனவர்கள் திருப்பித் தாக்கினர்.இரு தரப்பினரும் ஏற்கனவே அடிதடிக்கு தயாராக இருந்ததால் பயங்கர ஆயுதங்களை படகுகளில் வைத்திருந்தனர்.
கடலில் மோதிக் கொண்ட இரு தரப்பினரும் கரையை நோக்கிச் சென்றனர். கொல்லம் கடற்கரையில் இந்த மோதல்தொடர்ந்தது. இரு தரப்பினரும் ஈட்டி, கத்தி, வாள்களைக் கொண்டு தாக்கிக் கொண்டனர்.
இதில் அலெக்ஸ் (32) என்ற கேரள மீனவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த மோதலில் கொல்லம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 100 படகுகளுக்கு தீ வைக்கப்பட்டது.அந்தப் படகுகள் எரிந்து சாம்பலாயின.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் கலவரக் கும்பலைக் கலைப்பதற்காக முதலில் தடியடிநடத்தினர். அதில் யாரும் கலைந்து போகாததைத் தொடர்ந்து போலீசார் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்திமீனவர்களை நோக்கிச் சுட்டனர்.
அதையும் மீறி நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே போலீசார் வானை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.அதன் பிறகே கூட்டம் கலைந்து ஓடத் தொடங்கியது.
தற்போது அப்பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. திருவனந்தபுரம் மற்றும் ஆலப்புழாவிலிருந்துநூற்றுக்கணக்கான போலீசார் கொல்லத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.