மயக்க மாம்பழ ஜூஸ் கொடுத்து ரயில் பயணிகளிடம் ரூ.30 ஆயிரம் கொள்ளை
திருப்பத்தூர்:
ஹவுரா-திருவனந்தபுரம் ரயிலில் பயணிகளுக்கு மயக்க மருந்து கலந்த மாம்பழ ஜூஸையும் பிஸ்கட்டையும்கொடுத்து ரூ.30 ஆயிரத்தை 3 பேர் கொள்ளையடித்துச் சென்றனர்.
ஹவுரா-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு ஜோலார்பேட்டை வந்த சேர்ந்தது.
அப்போது அந்த ரயிலின் ஒரு பெட்டியில் மூன்று பயணிகள் மயங்கிய நிலையில் கிடந்தது தெரிய வந்தது.
உடனடியாக அவர்கள் மூவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மூன்று பேரும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றுதெரிய வந்தது. மயக்கம் தெளிந்த பின்னர் அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:
ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே ரயில் வந்து கொண்டிருந்த போது எங்களுடன் பயணம் செய்த வேறு மூன்றுபேர் எங்களுக்கு மாம்பழ ஜூஸும் பிஸ்கட்டும் கொடுத்தனர்.
அவற்றைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே நாங்கள் ரயிலிலேயே மயங்கி விழுந்து விட்டோம். அதன் பிறகு என்னநடந்தது என்று தெரியவில்லை.
ஆனால் எங்கள் சூட்கேசில் இருந்த ரூ.30 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது இப்போது தான் எங்களுக்குத்தெரிய வந்துள்ளது.
மயக்க மருந்து கலந்த மாம்பழ ஜூஸ் மற்றும் பிஸ்கட்டைக் கொடுத்த அந்த மூன்று பேரும் தான் நாங்கள் மயங்கிவிழுந்த பிறகு அந்தப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்று அவர்கள் கூறினார்கள்.
ஜோலார்பேட்டை போலீசார் தப்பியோடிய கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.