கோட்டைக்கு போறீங்களா? பச்சை சட்டை இருக்கா?
சென்னை:
தமிழக தலைமைச் செயலகத்துக்கு கருப்புச் சட்டை அணிந்து கொண்டு வருபவர்களைப் போலீசார் தடுத்து உள்ளேவிட மறுக்கின்றனர்.
நேற்று கருப்பு சட்டை அணிந்து கொண்டு வந்த ஒருவர் சட்டசபை நுழைவாயிலில் செல்ல முயன்றார்.
ஆனால் அவரைத் தடுத்து நிறுத்திய போலீசார் கருப்புச் சட்டை போட்டுக் கொண்டெல்லாம் உள்ளே வரக் கூடாதுஎன்று கூறினர்.
ஏன் என்று கேட்டதற்கு கருப்பு சட்டை என்பது எதிர்ப்பின் அடையாளம் என்பதால் அந்தக் கலரில் சட்டைஅணிந்துள்ள உங்களை கோட்டைக்குள் அனுப்ப முடியாது என்று போலீசார் கூறினர்.
நான் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவன் என்று அந்த நபர் கூறியும் போலீசார் அவரை உள்ளே விடவில்லை. மேலும்அவர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர் தான் என்பதற்கான எந்தவிதமான அடையாளத்தையும் காட்டவில்லை.
இதையடுத்து அவர் தலைமைச் செயலகத்தின் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றார். கருப்புச்சட்டை போட்டிருந்ததால் அங்கும் அவரை மடக்கிய போலீசார் உள்ளே விட மறுத்து திருப்பி அனுப்பி விட்டனர்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு பச்சை நிறம் தான் ராசி என்பதால் இப்போதெல்லாம் அவர் கலந்து கொள்ளும்விழாக்களில் நாற்காலிகள் பச்சை நிறத்தில் போடப்படுகின்றன. பேனர்கள் பச்சை நிறத்தில் கட்டப்படுகின்றன.விழாவுக்கு வரும் பெண்கள் பச்சை நிற புடவைகள் கட்டி வருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் மாளிகையும் பச்சை நிற கிரானைட் கற்களால் தான் இழைக்கப்பட்டுள்ளது.
அரசுத் துறைகளின் சார்பில் நடத்தப்படும் விழாக்களுக்குக் கூட பச்சை நிறத்தில் அழைப்பிதழ் அடித்து அதைஜெயலலிதாவிடம் கொடுத்து புளகாங்கிதம் அடைந்து வருகின்றனர் அமைச்சர்கள். கருப்பு ஆகாது என்று ஜோதிடர்யாராவது ஏதாவது சொல்லியிருக்கக் கூடும் என்று தெரிகிறது.
இதனால் கோட்டை வளாகத்துக்குள் நுழைய கருப்புக்கு தடை போடப்பட்டுள்ளது.
கருப்புச் சட்டை போட்டவர்கள் தலைமைச் செயலகத்துக்குள் நுழையக் கூடாது என யார் உத்தரவு போட்டது,எப்போது இந்த உத்தரவு போடப்பட்டது என்று தெரியவில்லை.
கருப்பு கலரில் இருப்பவர்களையே கோட்டைக்குள் விட மாட்டோம் என்று தடுக்காமல் இருந்தால் சரி!!