ஏவுகணை தளத்தில் தவறி வெடித்த குண்டு: 3 பேர் பலி
பலசூர்:
ஒரிசாவில் உள்ள ஏவுகணைத் தளத்தில் ஷெல் குண்டு ஒன்று தவறுதலாக வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஒரிசா மாநிலம் சந்திப்பூர் அருகே பாதுகாப்பு ஆய்வு நிறுவனத்துக்கு (டி.ஆர்.டி.ஓ.) சொந்தமான ஒரு சோதனைமையம் உள்ளது. பீரங்கி மற்றும் ஷெல் குண்டுகள் ஆகியவை இங்கு பரிசோதிக்கப்படுவது வழக்கம். ஏவுகணைச்சோதனைகளும் இங்கு தான் நடைபெறும்.
ஷெல் குண்டுகள் கடலை நோக்கிச் சுடப்பட்டு சோதிக்கப்படுவது வழக்கம். அப்படிச் சுடப்பட்டு வெடித்த பலகுண்டுகளின் எஞ்சிய பகுதிகள் கரையொதுங்கும்.
அவ்வாறு ஒதுங்கிய ஷெல் குண்டுகளை நொறுக்கி அதிலிருந்த வெண்கலக் கம்பிகளை அப்பகுதி மக்கள்பிரித்தெடுத்து விற்று விடுவது வழக்கம்.
இந்நிலையில் ஒரு ஷெல் குண்டு இந்த மையத்திலிருந்து சுடப்பட்டது. ஆனால் கடலுக்குள் சென்று விழுந்த அந்தக்குண்டு வெடிக்கவில்லை. அந்த மையத்தில் இருந்தவர்களும் வெடிக்காத அந்த குண்டைக் கண்டு கொள்ளவில்லை.
அவ்வாறு வெடிக்காத அந்தக் குண்டு நேற்று கரையொதுங்கியது. இதையடுத்து அந்த ஷெல் குண்டை சிலர் எடுத்தபோது அது திடீரென்று பலத்த சத்தத்துடன் வெடித்தது.
இதில் மூன்று பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர். அப்பகுதியில் நின்று கொண்டிருந்தஏராளமானவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.அவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
ஆனாலும் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கக் கூடும் என்று தெரிகிறது.
குண்டு வெடித்த இடத்தில் பொதுமக்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.