ஜாமீனில் வெளியே வர மாட்டார் வைகோ: மதிமுக அறிவிப்பு
சென்னை:
வைகோவை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதில்லை என மதிமுக மீண்டும் அறிவித்துள்ளது..
வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்க மதிமுகவின் மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விவரங்கள் குறித்து நேற்று அக் கட்சியின் மத்தியின் அமைச்சர் கண்ணப்பன் மற்றும் செஞ்சிராமச்சந்திரன் இருவரும் சிறையில் வைகோவை நேற்று சந்தித்துப் பேசினர்.
இதையடுத்து இன்று காலை அக் கட்சியின் தலைமையகமான தாயகத்தில் இக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம்அமைச்சர் கண்ணப்பன் கூறியதாவது:
வைகோவுக்கு ஜாமீன் கோரியோ அல்லது அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்தோ இப்போதைக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடரமாட்டோம். முதலில் போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டும். அதன் பின்னர் தான் என்ன செய்வது என்பது குறித்துஆலோசிப்போம்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தந்தோம். விடுதலைப் புலிகளை இலங்கையில் ஆதரிக்கிறோம். அவர்களை தமிழகத்தில்ஆதரிக்கவில்லை. அவர்களுக்கு நாங்கள் எந்த உதவியும் செய்யவில்லை.
ஜாமீனில் வெளியில் வர தனக்கு விரும்பமில்லை என்று வைகோ எங்களிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இந்தக் கைது வழக்குநீதிமன்றத்தில் வரும்போது வைகோ குற்றமற்றவர் என்பதை நிரூபிப்போம். கைதை எதிர்த்து எங்கள் போராட்டங்கள் தொடரும்.
ரேடியோ கோரி வைகோ வழக்கு:
இந் நிலையில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனக்கு ரேடியோ வைத்துக் கொள்ள அனுமதிகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டது முதல் அவர் கோரிக்கையை வைத்து வருகிறார். ஆனால், மாநில அரசு அனுமதி தர மறுத்து வருகிறது.அவருக்கு ஒரு தமிழ் பத்திரிக்கையும் ஒரு ஆங்கில பத்திரிக்கையும் மட்டுமே தரப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் உயர் நீதிமன்றத்தில் அவர் ரேடியோ வைத்துக் கொள்ள அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். தனது மனுவில் அவர்கூறியிருப்பதாவது:
நான் கடந்த 19ம் தேதி ரேடியோ பயன்படுத்த அனுமதிக்குமாறு சிறைத்துறை டி.ஐ.ஜிக்கு கடிதம் எழுதினேன். வேலூர் சிறைக்கண்காணிப்பாளர் மூலம் இந்த கோரிக்யைை அனுப்பினேன். ஆனால். அதற்கு இதுவரை பதிலே இல்லை.
விசாரைணக் கைதிகள் எழுதவும், படிக்கவும், பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடவும் உரிமை உண்டு. பூந்தமல்லி சிறையில் டிவி கூடவைக்க அனுமதி தரப்பட்டுள்ளது. எனக்கு டிவி எல்லாம் வேண்டாம். ரேடியோ வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
ஒரு கட்சியின் பொதுச் செயலாளராகவும் எம்.பியாகவும் உள்ள எனக்கு நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள உரிமை உண்டு. அதற்காகத்தான் ரேடியோ கேட்கிறேன். ரேடியோ தடை செய்யப்பட்ட சாதனம் அல்ல. எனவே ரேடியோ வைத்துக் கொள்ள எனக்கு அனுமதி தரவேண்டும் என்று அதில் வைகோ கூறியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.