திருவாவடுதுறை மாஜி துணை மடாதிபதியின் பாஸ்போர்ட், வங்கி கணக்குகள் முடக்கம்
குத்தாலம்:
திருவாவடுதுறை ஆதீனத்தைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அதன் துணைமடாதிபதியாக இருந்தவரின் பாஸ்போர்ட் மற்றும் வங்கிக் கணக்குகள் ஆகியவை முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
திருவாவடுதுறை ஆதீனமான சிவப்பிரகாச தேசிக பராமாச்சார்ய சுவாமிகளின் படுக்கையருகே கடந்த 7ம் தேதிஇரவு விஷ ஊசிகளுடன் நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர்.
ஆதீனத்தைக் கொலை செய்வதற்காகத் தான் அவர்கள் அங்கு வந்துள்ளதாகத் தெரிய வந்தது. இது தொடர்பாகதுணை மடாதிபதியாக இருந்த காசி விஸ்வநாத சுவாமிகள் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து இந்த மடத்தைப் பற்றிப் புதிய புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.
இவை குறித்து மாநில புலனாய்வுத் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
விசாரணையின் போது மயிலாடுதுறையைச் சுற்றியுள்ள பல கூட்டுறவு வங்கிகளில் காசி விஸ்வநாத சுவாமிகள்ஏராளமாகப் பணம் போட்டு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் பல பெரிய வங்கிகளிலும் பிக்ஸட் டெபாசிட் திட்டத்திலும் ஏராளமாக அவர் பணம் போட்டுவைத்துள்ளார்.
இதையடுத்து காசி விஸ்வநாத சுவாமிகளின் வங்கிக் கணக்குகள் அனைத்தையும் அதிகாரிகள் முடக்கி வைத்தனர்.அவருடைய பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டு விட்டது.
காசி விஸ்வநாத சுவாமிகள் குறித்து புலனாய்வுத் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காசி விஸ்வநாத சுவாமிகள் சமீபத்தில் தான் துணை மடாதிபதிபதவியிலிருந்து ஆதீனத்தால் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.