வைகோ ரேடியோ வைத்து கொள்ளலாம்: உயர் நீதிமன்றம் அனுமதி
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ரேடியோ வைத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டது முதல் அவர் தனக்கு ரேடியோ வைத்துக் கொள்ள அனுமதி கோரி வந்தார். இது தொடர்பாக சிறைஅதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துப் பார்த்தார், சிறைத் துறை டி.ஜி.பியிடம் கடிதம் கொடுத்துப் பார்த்தார்.
ஆனால், சிறை விதிகளைக் காட்டி இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது என அதிகாரிகள் கூறி வந்தனர்.
இதையடுத்து ரேடியோ வைத்துக் கொள்ள அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் வைகோ மனு தாக்கல் செய்தார்.
அதில், ஒரு கட்சியின் பொதுச் செயலாளராகவும் எம்.பியாகவும் உள்ள எனக்கு நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள உரிமை உண்டு.அதற்காகத் தான் ரேடியோ கேட்கிறேன். ரேடியோ தடை செய்யப்பட்ட சாதனம் அல்ல. எனவே ரேடியோ வைத்துக் கொள்ள எனக்குஅனுமதி தர வேண்டும் என்று வைகோ கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி கனகராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ரேடியோ வைத்துக்கொள்ள வைகோவுக்கு அனுமதி தர வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.