For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாதாளச் சாக்கடையில் விழுந்து சிறுமி சாவு: மக்கள் சாலை மறியல் - கோவையில் பரபரப்பு

By Staff
Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூரில் பாதாளச் சாக்கடைக்குள் ஒரு சிறுமி தவறி விழுந்து வெள்ளத்தில் சிக்கி இறந்ததைத் தொடர்ந்து அந்தச் சாக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த மறியல் தொடர்பாக 3 கவுன்சிலர்கள் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டதையடுத்து அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூரில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் நன்றாக மழை பெய்தது. இதையடுத்து நகரில் ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இங்குள்ள சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்த ப்ரியலட்சுமி (6) என்ற மாணவி நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாள்.

தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்ததால் அப்பகுதியில் மூடப்படாத ஒரு பாதாளச் சாக்கடை இருப்பது தெரியாமல் ப்ரியலட்சுமி அதில் விழுந்து விட்டாள்.

இதை தற்செயலாக நேரில் பார்த்த சிலர் ஓடி வந்து அவளை மீட்க முயன்றனர். ஆனால் வெள்ளம் வேகமாக ஓடிக் கொண்டிருந்ததால் அவளும் சாக்கடைக்குள்ளேயே வெள்ளத்துடன் அடித்துச் செல்லப்பட்டாள்.

சுமார் 5 கி.மீ. தொலைவிற்கு அடித்துச் செல்லப்பட்ட ப்ரியலட்சுமி சாக்கடை நீர் வந்து சேரும் ஒரு கால்வாயில் பிணமாகத் தான் மீட்கப்பட்டாள்.

மூடப்படாமல் கிடந்த அந்தப் பாதாளச் சாக்கடையை மூடக் கோரி சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் பலமுறை முறையிட்டும் கூட கோயம்புத்தூர் மாநகராட்சி அலட்சியமாக விட்டு விட்டது. இதனால் ப்ரியலட்சுமி நேற்று இதில் மாட்டிக் கொண்டு உயிரிழந்தாள்.

இதனால் கொதித்துப் போன அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் இன்று காலை அப்பகுதியில் உள்ள கோயம்புத்தூர்-சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி கவுன்சிலர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு மாநகராட்சிக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் மக்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்த முயற்சித்தனர். ஆனால் மக்கள் கலைய மறுத்ததைத் தொடர்ந்து போராட்டம் இன்னும் தீவிரமடைந்தது.

இதனால் போலீசார் மூன்று கவுன்சிலர்கள் உள்பட மறியல் செய்த 20 பேரைக் கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே பலத்த வாய்த் தகராறு ஏற்பட்டு, அடிதடி வரை செல்லும் அளவுக்கு மோசமாகியது.

இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு வேன் வேகமாகச் சென்று விட்டது.

இதற்கிடையே கோயம்புத்தூரில் ஆங்காங்கே மூடப்படாமலிருக்கும் பாதாளச் சாக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X