""எதைப் பேச வேண்டும் என்று எனக்குத் தெரியும்"": அதிமுகவுக்கு கண்ணப்பன் பதில்
கோயம்புத்தூர்:
அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக நான் எதுவும் பேசி விடவில்லை என்று மதிமுக அமைச்சரான கண்ணப்பன் இன்று கூறினார்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய மதிமுகவைச் சேர்ந்த இரு மத்திய அமைச்சர்களையும் நீக்க வேண்டும் என்று நேற்று நாடாளுமன்றத்தில் அதிமுகவினர் கூச்சல் போட்டு அமளி ஏற்படுத்தினர்.
இந்நிலையில் இது குறித்து இன்று கோயம்புத்தூரில் நிருபர்களிடம் கண்ணப்பன் கூறியதாவது:
இத்தனை ஆண்டு கால என்னுடைய அரசியல் கால அனுபவத்தில் அரசியல் சட்டம் எல்லாம் எனக்கும் தெரியும். எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்றும் எனக்கு நன்றாகவே தெரியும்.
அமைச்சராக நான் பதவியேற்கும் போது ஏற்றுக் கொண்ட உறுதிமொழிகளின் படி தான் எப்போதுமே நான் நடந்து வந்துள்ளேன். இதனால் என்னைப் பதவியை விட்டு நீக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை.
தமிழகத்தில் பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கும் நோக்கிலேயே மதிமுக பொதுச் செயலாளரான வைகோவும் எட்டு மதிமுக பிரமுகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இனப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்குப் பாதுகாப்பளித்து வரும் புலிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம். புலிகளை ஆதரிப்பதாலேயே அவர்களுடைய நடவடிக்கைகளை இந்திய மண்ணில் நாங்கள் ஆதரிக்கிறோம் என்று கூறிவிட முடியாது.
இந்தியாவில் எந்தப் பகுதியில் தீவிரவாதமும் வன்முறையும் தலை தூக்கினாலும் மதிமுக அதைக் கடுமையாக எதிர்க்கும் என்றார் கண்ணப்பன்.
-->