வைகோ, நெடுமாறனை விடுவிக்க இலங்கை அமைச்சர் கோரிக்கை
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை அமைச்சர் சந்திரசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
இலங்கை தமிழர்களின் ஆதரவில்லாமல் உலகில் பரவிக் கிடக்கும் தமிழர்கள் ஒன்று பட முடியாது என்பதை வைகோவும், நெடுமாறனும் நன்றாக உணர்ந்துள்ளனர்.
எனவே தான் தங்களுடைய நிலைகளை அவர்கள் யாருக்கும் பயப்படாமல் தைரியமாகத் தெரிவித்து வருகின்றனர்.
எனவே அவர்களுடைய உண்மையான உள்நோக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று அக்கடிதத்தில் கூறியுள்ளார் சந்திரசேகரன்.
கடந்த ஜூலை 20ம் தேதி உலகத் தமிழர் பேரவை துவக்கப்பட்ட போது ஆயிரக்கணக்கான வைகோக்களும் நெடுமாறன்களும் தமிழகத்திற்காகவும் தமிழ் மக்களுக்காகவும் தேவை என்று சந்திரசேகரன் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.