மீண்டும் கொள்ளை நகராகிறது சென்னை மாநகர்
சென்னை:
சென்னையில் மீண்டும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. நேற்று மட்டும் நடந்த இரு வேறு சம்பவங்களில் 85 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
கடந்த சில மாதங்களாகவே சென்னையில் தொடர்ந்து கொள்ளை நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சொல்லி வைத்தாற்போல தினமும் கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வந்தன.
இதையடுத்து சென்னை மாநகரப் போலீசார் இரவு நேர ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தினர். மேலும் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த வாட்டசாட்டமான இளைஞர்களே இரவு ரோந்துப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்கள் குறைய ஆரம்பித்தன. மேலும் பல கொள்ளையர்களும் பிடிபட்டனர்.
கே.கே. நகரில்...
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொள்ளைச் சம்பவங்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன.
கே.கே. நகரில் உள்ள டாக்டர் லட்சுமணசாமி சாலையைச் சேர்ந்த நிர்மல் சேகர் என்பவர் தன் குடும்பத்தினருடன் நேற்று அதிகாலை நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் வெகு தைரியத்துடன் நிர்மலின் பெட்ரூமிலும் புகுந்துள்ளனர்.
பின்னர் ஓசைப்படாமல் பீரோவைத் திறந்து 50 பவுன் நகை மற்றும் ரூ.12,000 ரொக்கம் ஆகியவற்றைக் கொள்ளையடித்து விட்டு வந்த சுவடி தெரியாமல் ஓடி விட்டனர்.
நிர்மல் குடும்பத்தினர் காலை எழுந்த பிறகு தான் கொள்ளை போன விவரம் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கே.கே. நகர் போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
திருமங்கலத்தில்...
இதற்கிடையே சென்னையின் மற்றொரு பகுதியான திருமங்கலத்திலும் நேற்று பட்டப் பகலிலேயே கொள்ளை நடந்துள்ளது.
எம்.ஆர்.எல். நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சொக்கலிங்கம் என்பவர் திருமங்கலம் முதல் தெருவில் உள்ள முதல் பிளாக்கில் வசித்து வருகிறார்.
நேற்று பிற்பகல் தன்னுடைய வீட்டைப் பூட்டிவிட்டு மருத்துவமனைக்குச் சென்றிருந்தார் சொக்கலிங்கம். பின்னர் மாலையில் அவர் வீட்டுக்குத் திரும்பி வந்து பார்த்த போது கதவில் பூட்டு உடைந்து தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் வீட்டின் கதவு உள்பக்கமாகவும் பூட்டப்பட்டிருந்தது. உடனே பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு சொக்கலிங்கம் உள்ளே சென்றார். வீட்டிலுள்ள பீரோவைச் சோதனையிட்ட போது அதிலிருந்த 35 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் சொக்கலிங்கம் புகார் கொடுத்துள்ளார்.
இந்த இரண்டு கொள்ளைச் சம்பவங்களையும் தொடர்ந்து சென்னை மாநகர மக்கள் மீண்டும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.