ஜெயலலிதாவின் ஜோதிடர் உயிருக்கு ஆபத்து?
மலப்புரம் (கேரளா):
முதல்வர் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கரின் உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கேரள போலீசாருக்கு தமிழக அரசு எச்சரிக்கை அனுப்பியுள்ளது.
இதையடுத்து பணிக்கருக்கு கேரள போலீசாரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது வீட்டின் முன் ஆயுதம் தாங்கிய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா மீதான வழக்குகள் சாதகமாய் முடியும், மீண்டும் அவர் ஆட்சிக்கு வருவார் என யூகித்துச் சொன்னவர் பணிக்கர். இவரது யோசனைப்படி கேரள மாநிலத்தின் பல்வேறு கோவில்களில் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலா ஆகியோர் பூஜைகள் செய்தனர்.
கோவிலுக்கு யானைக்குட்டி, தங்கக் குடங்கள் போன்றவற்றை தானம் செய்தனர். அவர் சொன்னது மாதிரியே மீண்டும் ஆட்சிக்கு வந்தார் ஜெயலலிதா. இதையடுத்து முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் பணிக்கரை கலந்து ஆலோசித்தே செய்து வருகிறார் முதல்வர்.
ஜெயலலிதாவுக்காக அஸ்டமங்கல பிரஷ்ணம் என்ற சிறப்பு ஜோதிட சாஸ்திர யாகத்தையும் நடத்தினார் பணிக்கர். இதில் பல்வேறு ஜோதிடர்கள் பல நாட்கள் தொடர்ந்து யாகம் நடத்தி விவாதம் நடத்தி எதிர்காலம் குறித்து கணிப்பார்கள்.
இதன்படி அடுத்த பல ஆண்டுகளுக்கு ஜெயலலிதா என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் குறித்துக் கொடுத்துள்ளார் பணிக்கர். கண்ணகி சிலை அகற்றத்திலும் இவருக்கு பங்கு இருப்பதாகக் கூறப்பட்டது.
இவரது யோசனைப்படி தான் வைகோவும் கைது செய்யப்பட்டுள்ளதாக கேரளத்தில் பேச்சு எழுந்துள்ளது. இதையடுத்து இவரைத் தீர்த்துக் கட்ட புலிகள் முயலலாம் என தமிழக போலீசார் கருதுகின்றனர்.
இதைத் தொடர்ந்து தமிழக ஸ்பெஷல் பிராஞ்ச் சி.ஐ.டி. பிரிவு போலீசார் கேரள மாநில போலீசாரிடம் இது குறித்து பேச்சு நடத்தினர்.
அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்குமாறு தமிழக அரசின் கோரிக்கையை கேரள போலீசாரிடம் ஸ்பெஷல் பிராஞ்ச் போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து பணிக்கருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.