பா.ஜ.க. மோசடி: உரிமங்களை ரத்து செய்தார் வாஜ்பாய்
டெல்லி:
டெண்டர்களே விடாமல் இஷ்டத்துக்கு பா.ஜ.க. எம்.பிக்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஒதுக்கப்பட்ட 3,158 பெட்ரோல் பங்க், கேஸ் ஏஜெண்சி உரிமங்களை பிரதமர் வாஜ்பாய் இன்று ரத்து செய்தார்.
கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக 2000ம் ஆண்டு ஜனவரியில் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி டெண்டர்கள் விடாமல் வீரர்களின் குடும்பத்தினருக்கு பெட்ரோல் பங்குகளையும் கேஸ் ஏஜென்சிகளையும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.
முழுக்க முழுக்க நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களை வாழ வைக்க கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தில் பா.ஜ.கவினர் நாடு முழுவதும் புகுந்து விளையாடியுள்ளனர்.
பா.ஜ.க. எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் என பலருக்கும் இந்த ஏஜென்சிகளும் பங்குகளும் டெண்டர்கள் இல்லாமல் சகட்டுமேனிக்கு ஒதுக்கப்பட்டன.
வாஜ்பாயின் உறவுப் பெண்:
இதில் பிரதமர் வாஜ்பாயின் உறவினரான அபர்ணா மிஸ்ரா என்ற பெண்ணுக்கும் ஒரு பெட்ரோல் பங்க் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெளவில் வசித்து வருகிறார்.
இவர்களின் பெயர்களை முழு விவரத்துடன் மும்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு இந்தி பத்திரிக்கை வெளியிட்டதால் அதை மறைக்க முடியாமல் மத்திய அரசு தடுமாறியது. விவகாரத்தை எதிர்க் கட்சிகள் பெரிதாக்கினால் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் பெரும் அடி விழும் என்பதால் இன்று பிரதமர் வாஜ்பாய் இதில் தலையிட்டார்.
2000ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பின் இவ்வாறு டெண்டர் இல்லாமல் தரப்பட்ட அனைத்து பெட்ரோல் பங்க், கேஸ் ஏஜென்சி, மண்ணெண்ணெய் ஏஜென்சி உரிமங்களை இன்று ரத்து செய்தார் வாஜ்பாய். அதே நேரத்தில் கார்கில் வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட உரிமங்கள் ரத்து செய்யப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெண்டர் மூலமே இனி இந்த ஏஜென்சிகளின் உரிமங்கள் விற்கப்படும் என பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விவகாரத்தை எதிர்க் கட்சிகள் விடுவதாக இல்லை. இத்தனை காலம் காங்கிரஸ் கட்சியை போபர்ஸ் ஊழலுக்குக்கா போட்டு வாட்டிய பா.ஜ.க. செய்துள்ள மிகப் பெரிய தேசிய ஊழல் இது என காங்கிரஸ் எம்.பி. தாஸ்முன்ஷி கூறினார்.
பெட்ரோலிய அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும், மக்கள் பணத்தை மோசடி செய்த பெட்ரோலியத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த விவகாரம் குறித்து முழு அளவில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க் கட்சிகள் கோரியுள்ளன.
பா.ஜ.க. அரசின் ஊழல்களில் இது ஒரு துளி தான் என மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்கள் கூறியுள்ளன. இக் கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், உரிமத்தை ரத்து செய்துவிட்டதால் மட்டும் பா.ஜ.க. புனிதராகிவிட முடியாது.
நாட்டின் சொத்தை தங்கள் கட்சியினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பகிர்ந்து கொடுத்து ஊழலையும் மோசடியையும் ஒரு நிறுவனம் போல நடத்தியுள்ளனர் பா.ஜ.க. தலைவர்கள்.
மக்களின் வரிப் பணத்தை சுருட்டி விழுங்க முயன்ற அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வாஜ்பாய் அரசின் மீது மக்கள் இழந்துவிட்ட நம்பிக்கையை மீண்டும் பெற முடியாது என்று அக் கட்சிகள் கூறியுள்ளன.