அதிமுகவினர் கலவர பயம்: கஞ்சி அருந்தும் திட்டத்தை ரத்து செய்தார் கருணாநிதி
சென்னை:
திருவள்ளூர் மாவட்டம் அம்மையார் குப்பத்தில் இன்று நெசவாளர்களுடன் சேர்ந்து கஞ்சி அருந்தவிருந்த தனது திட்டத்தை கருணாநிதி ரத்து செய்தார்.
கருணாநிதிக்குப் போட்டியாக அதே இடத்தில் அதிமுகவினரும் இன்று அங்கு நெசவாளர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். இந் நிலையில் தான் அங்கு சென்றால் அதிமுகவினர் கலவரத்தைத் தூண்டிவிட்டு உயிர் பலிகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் தனது திட்டத்தை ரத்து செய்வதாக கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று இரவு நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
பசி பட்டினியால் வாடிக் கொண்டிருக்கும் ஏழை கைத்தறி நெசவாளர்களுக்கு கஞ்சி வழங்கும் பணியை திமுக மேற்கொண்டுள்ளது.
இதையொட்டி திருத்தணிக்கு அருகில் உள்ள அம்மையார் குப்பத்தில் உள்ள நெசவாளர்களுக்கு இன்று கஞ்சி வழங்கி நானும் கஞ்சி அருந்துவதாக இருந்தேன்.
ஆனால் அதிமுக அரசு உடனடியாக அந்தப் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் தேங்கிக் கிடக்கும் கைத்தறித் துணிகளைக் கொள்முதல் செய்ய ரூ.1 கோடி ஒதுக்கியுள்ளது.
மேலும் இன்றே அந்த ஊரில் அமைச்சர்களைக் கொண்டு நெசவாளர்களுக்கு உணவு வழங்கப் போவதாகவும் அறிவித்து அதற்கான ஏற்பாடுகளையும் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.
அம்மையார் குப்பத்தில் அமளியை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டே போட்டா போட்டியாக அதிமுக அரசு முனைந்திருப்பதால், அதைத் தவிர்த்து அவ்வூர் நெசவாளர்களின் அமைதிக்குக் குந்தகம் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக நான் இந்தக் கஞ்சி வழங்கும் திட்டத்தை ரத்து செய்துள்ளேன் என்றார் கருணாநிதி.
இந்தப் பிரச்சனை குறித்து ஆளுநர் ராமமோகன் ராவிடம் பேசினீர்களா என்று ஒரு நிருபர் கேட்டார்.
"ஆளுங்கட்சியினரே சட்டம்-ஒழுங்கைக் குலைக்கும் விதமாக மோதலை உருவாக்க முனைகிறார்கள் என்பதை ஆளுநரிடம் தெரிவிக்குமாறு அவருடைய செயலாளரிடம் கூறினேன். சிறிது நேரத்திலேயே எங்களைத் தொடர்பு கொண்ட அந்தச் செயலாளர், இது அரசியல் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால் ஆளுநர் என்ன செய்ய முடியும் என்று கூறினார்" என்று கருணாநிதி பதிலளித்தார்.
கஞ்சித் தொட்டி வைப்பதால் நெசவாளர்களின் பிரச்சனை தீர்ந்து விடுமா என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, நிரந்தரத் தீர்வு காண முடியாமல் போனாலும் அவ்வப்போது ஏற்படும் பசிக்குத் தீர்வு காண முடியும் அல்லவா என்று கூறிய கருணாநிதி, அரசியல் அறிவாளி என்று புகழப்பட்ட ராஜாஜியின் ஆட்சிக் காலத்திலேயே கஞ்சித் தொட்டி வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.