வாழப்பாடி-ஜெயலலிதா திடீர் சந்திப்பு
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி இன்று திடீரென்று சந்தித்தார்.
காங்கிரசுடன் தமாகாவை இணைப்பதற்கு ஆரம்பத்திலிருந்தே தன்னுடைய எதிர்ப்பை வாழப்பாடி தெரிவித்து வருகிறார். இதனால் காங்கிரஸ் மேலிடம் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் கூறி வருகிறார்.
தமிழக ராஜிவ் காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விட்டு தன்னுடைய தாய்க் கட்சியான காங்கிரசிலேயே மீண்டும் சென்று இணைந்து விட்ட போதிலும் தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் இன்னும் அவ்வப்போது உரசிக் கொண்டு தான் வருகிறார் வாழப்பாடி.
இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்த வாழப்பாடி நேராக ஜெயலலிதாவின் அறைக்குச் சென்று அவரைச் சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
பின்னர் வெளியே வந்த வாழப்பாடி நிருபர்களிடம் கூறுகையில்,
மரியாதை நிமித்தமாகவே ஜெயலலிதாவைச் சந்தித்தேன்.
சேலம் இரும்பு எஃகு ஆலையைத் தனியார் மயமாக்கக் கூடாது என்று மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று ஜெயலலிதாவைக் கேட்டுக் கொண்டேன்.
இந்த ஆலைக்கு மத்திய அரசு ரூ.200 கோடி கடன் கொடுத்து உதவினால் அது உண்மையிலேயே நல்ல லாபத்துடன் தான் இயங்கும் என்றும் ஜெயலலிதாவிடம் எடுத்துக் கூறினேன் என்றார் வாழப்பாடி.
காங்கிரசை உடைக்க அதிமுக தொடர்ந்து முயற்சிகளைச் செய்து வரும் நிலையில் இவர்களுடைய சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.