1,728 போலீசாரிடம் குறை கேட்டார் ஜெ.
சென்னை:
போலீசாரிடம் குறை கேட்கும் நிகழ்ச்சியின் 4வது கட்டமாக இன்று தமிழகத்தில் வடக்கு மண்டலப் போலீசாரிடம் முதல்வர் ஜெயலலிதா குறைகளைக் கேட்டு மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட வடக்கு தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார், சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆகியோர் இன்று ஜெயலலிதாவைச் சந்தித்தனர்.
தங்களுடைய குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் சென்னை தலைமை செயலகம் வந்து ஜெயலலிதாவைச் சந்தித்த அவர்கள் தங்களுடைய குறைகளைக் கூறினார்கள்.
இட மாற்றம், நிவாரணம், மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் ஜெயலலிதாவிடம் இந்தப் போலீசார் விடுத்தனர். தங்களுடைய மனுக்களையும் அவர்கள் அவரிடம் கொடுத்தனர்.
முன்னதாக அவர்கள் முன் ஜெயலலிதா பேசுகையில்,
போலீசாரின் பணி அவ்வளவு எளிதானது கிடையாது. கடினமும் துயரமும் அபாயமும் நிறைந்த பணியை மேற்கொண்டு அவர்கள் நாட்டைக் காத்து வருகின்றனர்.
அவர்களுடைய அனைத்து நியாயமான கோரிக்கைகளையும் தமிழக அரசு ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு நிச்சயம் உதவி செய்யும் என்றார் ஜெயலலிதா.
ஐந்தாவது மற்றும் இறுதிக் கட்டமாக சென்னை மாநகரப் போலீசாரிடம் வரும் 14ம் தேதி ஜெயலலிதா குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.