மதுரை கட்சி அலுவலகத்தில் பிரபாகரன் படம் பறிமுதல்
மதுரை:
வைகோவுடன் சேர்த்து பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை, திருச்சி மற்றும் சேலம் சிறைகளில்வைக்கப்பட்டுள்ள மதிமுக பிரமுகர்களின் வீடுகளிலும் இன்று காலை க்யூ பிராஞ்ச் போலீசார் சோதனையைஆரம்பித்துள்ளனர்.
மதிமுகவின் ஈரோடு மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏவான பி.எஸ். மணியம், மதுரைமாவட்டச் செயலாளர் வீர இளவரசன், சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் செவந்தியப்பன், வழக்கறிஞர்பிரிவுச் செயலாளர் அழகுசுந்தரம்,
மதுரை மாநகரச் செயலாளர் பூமிநாதன், மதுரை மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கணேசன் மற்றும் மதுரைமாவட்ட இலக்கிய அணித் தலைவர் நாகராஜன் ஆகிய எட்டு பேரின் வீடுகளில் போலீசார் இன்று காலை அதிரடிசோதனை மேற்கொண்டனர்.
இன்று காலை 8 மணிக்கு அனைத்து வீடுகளிலும் ஒரே நேரத்தில் போலீசார் சோதனையைத் தொடங்கினர்.
மதுரை அருகே உள்ள சோழவந்தானில் தான் மணியத்தின் வீடு உள்ளது. அங்கு சோதனை நடத்திய போலீசார்அங்கிருந்து சில புகைப்படங்கள், வீடியோ கேசட்டுகள் போன்றவற்றைக் கைப்பற்றினர்.
மதுரை-புதூரில் உள்ள பூமிநாதனின் வீட்டில் சில கேசட்டுகளைக் கைப்பற்றியுள்ளதாக சோதனை முடிந்த பின்னர்க்யூ பிராஞ்ச் போலீசார் இன்று மாலை தெரிவித்தனர். சமீபத்தில் கோயம்புத்தூரில் நடந்த மதிமுக மாநாட்டில்வைகோ பேசிய விவரங்கள் அந்தக் கேசட்டில் உள்ளதாகத் தெரிகிறது.
மதுரை-நேதாஜி சாலையில் உள்ள மதிமுக அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போதுவிடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் கொண்ட வாழ்த்து மடல் மற்றும் சிலபோஸ்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதே போல் மதுரையில் உள்ள வீர இளவரசன், கணேசன் ஆகியோர் வீடுகளிலும், திருமங்கலத்தில் உள்ளஅழகுசுந்தரம், நாகராஜன் ஆகியோரின் வீடுகளிலும், காரைக்குடியில் உள்ள செவந்தியப்பன் வீட்டிலும் போலீசார்சோதனை மேற்கொண்டனர்.
ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை சோதனை நடைபெற்றதாக க்யூ பிராஞ்ச் போலீசார்தெரிவித்தனர்.
ஆவணங்கள் சிக்கவில்லை:
இதற்கிடையே ஈரோட்டில் கணேசமூர்த்தியின் வீட்டில் இன்று சோதனை நடத்திய போலீசார் அங்கு ஆவணங்கள்ஏதும் கிடைக்காமல் வெளியேறினர்.
இன்று காலை 8 மணிக்கு கோயம்புத்தூர் மாவட்ட டி.எஸ்.பி. ஜான் செல்லையா தலைமையில் ஈரோடு சென்ற க்யூபிராஞ்ச் போலீசார் பெரியார் நகரில் உள்ள கணேசமூர்த்தியின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
கணேசமூர்த்தியின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் அப்போது அங்கு இருந்தனர். சுமார் 9.45 மணி வரைபோலீசார் அங்கு சோதனை நடத்தினர்.
பின்னர் ஆவணங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் வெளியே வந்த க்யூ பிராஞ்ச் போலீசார், நாங்கள் தேடி எந்தஆவணமும் கிடைக்கவில்லை என்று கணேசமூர்த்தியின் வக்கீலிடம் எழுதிக் கொடுத்து விட்டுச் சென்று விட்டனர்.