திமுகவினர் மீது தடியடி: ஆளுநரிடம் மதுரை போலீஸ் கமிஷனர் விளக்கம்
சென்னை:
மதுரையில் திமுகவினர் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவம் குறித்து தமிழக ஆளுநர் ராமமோகன் ராவிடம்அந்நகரப் போலீஸ் கமிஷனர் சூர்யபிரகாஷ் விளக்கம் அளித்தார்.
கடந்த 9ம் தேதி மதுரையில் திமுக ஏற்பாடு செய்திருந்த நெசவாளர்களுக்கு கஞ்சி வழங்கும் விழா நிகழ்ச்சியின்போது அக்கட்சியினர் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர்.
இச்சம்பவத்தின் போது முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், மதுரை மேயர் செ. ராமச்சந்திரன்,முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினரையும் போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவத்திற்குக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்த திமுக சூர்யபிரகாஷை உடனடியாக சஸ்பெண்ட் செய்து நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக ஆளுநரிடம் கேட்டுக் கொண்டது.
இந்நிலையில் மதுரை காமராஜர் பட்டமளிப்பு விழாவுக்காக அங்கு சென்றிருந்த ராமமோகன் ராவை சூர்யபிரகாஷ்நேரில் சென்று பார்த்து தடியடி சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார்.
பின்னர் நேற்று சென்னை வந்த சூர்யபிரகாஷ், தமிழக தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர் மற்றும் உள்துறைச்செயலாளர் நரேஷ் குப்தா ஆகியோரையும் சந்தித்து மதுரை சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார்.