முஷாரபுக்கு கலாம் சரியான பதிலடி
டெல்லி:
ஜம்மூ-காஷ்மீர் முழுக்க முழுக்க இந்தியாவின் ஒரு பகுதி. இதை சர்வதேசப் பிரச்சனையாக்க எக் காரணம் கொண்டும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி கலாம் இன்று இரவு நாட்டு மக்களுக்கு டிவி மற்றும் ரேடியோ மூலம் ஆற்றவுள்ள உரையின் விவரம்:
தீவிரவாதத்தை என்று பாகிஸ்தான் நிறுத்துகிறதோ அப்போது தான் அந்த நாட்டுடன் பேசுவோம்.
அதுவரை பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்.
ஒரு விஷயத்தை மிகவும் தெளிவாக்க விரும்புகிறேன். காஷ்மீர் என்பது முழுக்க முழுக்க இந்தியாவின் ஒரு பகுதி. அதில் சர்வதேசபிரச்சனைக்கு இடமில்லை. அங்கு இருப்பது பாகிஸ்தான் உதவியுடன் நடக்கும் தீவிரவாதப் பிரச்சனை மட்டும் தான்.
தீவிரவாதம் நின்றால் தான் அமைதி திரும்பும். அம் மாநிலத்தில் தேர்தல் நடத்துவதில் இந்தியா தீவிரமாக இருக்கிறது.
இந்தியா பல மதங்கள், பல இனங்கள் கொண்ட நாடு. இங்கு மதவாதத்துக்கு இடமே இருக்கக் கூடாது. பிரிவினைவாதம் தான் நமக்கு மிகப்பெரிய ஆபத்து. அதற்கு இடமே தரக் கூடாது. நமது இப்போதை முதல் வேலை நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவது தான். அது தான் நமதுதாரக மந்திரமாக இருக்க வேண்டும்.
அதைவிட்டுவிட்டு மதச் சண்டை போடுவது, பிரிவினைவாதத்தை வளர்ப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடலாகாது.
மக்களிடம் ஒற்றுமை இல்லாவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. நமது பலமே பல இனங்களும் பல மதங்களும் கொண்ட நாடு என்பதுதான். அதை சீரழித்துவிடக் கூடாது. கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளாக பல இன-பல மொழி- பல மதங்கள் கொண்ட ஒன்றுபட்ட நாடாகநின்று காட்டியவர்கள் நாம். அந்தப் பெருமைக்கு ஊறு விளைவித்துக் கூடாது என்று கலாம் தனது உரையில் கூறவுள்ளார்.
இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி கலாமுக்கும் பிரதமர் வாஜ்பாய்க்கும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் வாழ்த்துத்தெரிவித்துள்ளார்.
இன்று தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது பாகிஸ்தான். சுதந்திர தின உரையாற்றிய முஷாரப். காஷ்மீரில் தேர்தல் நடத்துவதன்மூலம் அந்த மாநிலத்தின் மீது இந்தியா தனது ஆக்கிரமிப்பை வலுப்படுத்த முயல்வதாக உளரித் தீர்த்தார்.
இதற்குப் பதிலடியாகத் தான் கலாமின் உரை அமைந்துள்ளது. மேலும் பாகிஸ்தானின் சுதந்திர தினத்தையொட்டி அந் நாட்டு அதிபருக்குதனது வாழ்த்தையும் கலாம் தெரிவித்துக் கொண்டார்.