பாண்டிச்சேரியில் இருந்து மதுரை வந்தார் சோனியா
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் கண்ணன் தலைமையில் இயங்கி வந்த பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் இன்று காங்கிரஸ்கட்சியில் இணைந்தது. சோனியா காந்தி முன்னிலையில் காலை இந்த இணைப்பு விழா நடந்தது.
தமிழகத்தில் த.மா.காவும் காங்கிரசும் இணைவதைப் போல பாண்டிச்சேரி மக்கள் காங்கிரசும் சோனியாதலைமையிலான காங்கிரசில் இணைந்துவிட்டது. ராஜிவ் காந்தி திடலில் நடந்த நிகழ்ச்சியில் சோனியா, மாநிலமுதல்வர் ரங்கசாமி தலைமையில் கண்ணன் தனது கட்சியை காங்கிரசில் அதிகாரப்பூர்வமாக இணைத்தார்.
அதில் பேசிய சோனியா, என்னைப் பொறுத்தவரை காங்கிரசில் இணைந்த அனைவரையும் ஒரே மாதிரியாகத் தான்பார்ப்பேன். வேண்டியவர், வேண்டாதவர் என்ற பிரிவினை இருக்காது. கட்சியில் இணைந்த அனைவரும்காங்கிரஸ்காரர்கள் தான். யாரையும் நாங்கள் கைவிட மாட்டோம்.
சுதந்திர இந்தியாவில் பா.ஜ.கவைப் போன்ற ஒரு மோசமான மத்திய அரசு இருந்ததே இல்லை. வறட்சிப்பணிகளுக்குக் கூட நிதி ஒதுக்க மறுக்கும் கல் நெஞ்சக்காரர்கள் ஆட்சியில் அமர்ந்திருப்பது வேதனை. தமிழகத்தில்நெசவாளர்கள் பட்டினி கிடக்கும் படு மோசமான நிலை நிலவுகிறது என்றார் சோனியா.
இதில் பங்கேற்க சோனியா காந்தி இன்று காலை டெல்லியில் இருந்து சென்னை வந்தார். பின்னர் ஹெலிகாப்டர்மூலம் அவர் பாண்டிச்சேரி புறப்பட்டுச் சென்றார்.
பாண்டிச்சேரி அரசு அறிமுகப்படுத்தியுள்ள காலை உணவுத் திட்டத்தையும் சோனியா காந்தி தொடங்கி வைத்தார்.
ராஜீவ் காந்தி காலை உணவுத் திட்டம் என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரையிலான பள்ளி மாணவர்கள் 95,000 பேருக்கு இத்திட்டத்தின் கீழ் தினசரி காலை 85 கிராம் எடையுள்ள பிரெட்(ரொட்டி), 150 மில்லி அளவுள்ள பால் வழங்கப்படும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும். இதன் மூலம் அரசுக்குஆண்டுக்கு ரூ. 8 கோடி செலவாகும்.
சோனியா காந்தி பாண்டிச்சேரிக்கு வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாண்டிச்சேரியில்காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால் அந்த நகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு சோனியா ஹெலிகாப்டர் மூலம் மதுரை புறப்பட்டார். மாலை 4 மணிக்கு அவர்மதுரை வந்தார். அங்கு த.மா.கா.- காங்கிரஸ் இணைப்பு விழாவில் பங்கேற்கிறார். இரவே டெல்லி திரும்புகிறார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய சோனியா, தமிழ் மாநில காங்கிரஸ்இணைவதால் காங்கிரஸ் கட்சி பல மடங்கு பலம் பெறும் என்றார்.