பஞ்சாயத்து தலைவர் தலையை வெட்டிக் கொலை: கயத்தாறில் கடும் பதற்றம்
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே கயத்தாறில் பஞ்சாயத்துத் தலைவரும் அவருடைய சகோதரரும் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
கயத்தாறு அருகே உள்ள செட்டிக்குறிச்சி பஞ்சாயத்துத் தலைவர் சங்கர லட்சுமணன். கயத்தாறில் உள்ளபஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்கு தன் சகோதரருடன் நேற்று சங்கர லட்சுமணன் வந்திருந்தார்.
அங்கு சில வேலைகளை அவர்கள் இருவரும் முடித்துக் கொண்டு நேற்று மாலை தங்கள் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத சிலர் இருவரையும் வழிமறித்து கத்தி, அரிவாள், வேல்,ஈட்டி போன்ற பயங்கரமான ஆயுதங்களால் தாக்க ஆரம்பித்தனர்.
அவர்கள் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக சங்கர லட்சுமணனும் அவருடைய சகோதரரும் தப்பி ஓடமுயற்சித்தனர். ஆனால் அந்தக் கும்பல் அவர்களை ஓட ஓட கொலை வெறியுடன் பயங்கரமாகத் தாக்கியது.
இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் சங்கர லட்சுமணன்தலையைத் தனியாக வெட்டி எடுத்து வெகு தூரத்தில் வீசிவிட்டு அந்தக் கும்பல் சென்று விட்டது.
இருவரின் உடலையும் நேற்றிரவு போலீசார் கைப்பற்றினர். சங்கர லட்சுமணனின் உடல் மட்டும் தான்போலீசாருக்கு கிடைத்தது. தலையைத் தேடி போலீஸார் தீவிர வேட்டையாடி வருகின்றனர்.
இந்தக் கொடூரமான இரட்டைக் கொலையைத் தொடர்ந்து கயத்தாறு பகுதியில் கடும் பதற்றம் நிலவியது. அப்பகுதிமுழுவதும் ஆயுதமேந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு முழுவதும் அப்பகுதியில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் இன்று காலையில் தான் பஸ்போக்குவரத்து சீரானது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலிருந்தே சங்கர லட்சுமணனுக்கும் வேறுசிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. அவர்கள் தான் இந்தக் கொலைகளைச் செய்திருப்பதாகத் தெரிகிறது.
கொலையாளிகளைப் பிடிப்பதற்காகத் தனிப் போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.