செப்-16ல் புலிகள்- இலங்கை பேச்சு: நார்வே அறிவிப்பு
ஓஸ்லோ:
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான தாய்லாந்து அமைதிப் பேச்சுவார்த்தை செப்டம்பர் 16ம் தேதி ஆரம்பிக்கும்என நார்வே அறிவித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகள் 18ம் தேதி வரை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் மக்களுக்கு மிகுந்த நம்பிக்கைகள் அளித்துள்ள இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கான அதிகாரப்பூர்வமான தேதி இப்போதுதான் முதல்முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
தாய்லாந்து நாட்டு அரசுடன் பேச்சு நடத்தி இந்தத் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளதாக நார்வே நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் தாய்லாந்தில் எந்த இடத்தில் பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை. பாதுகாப்புக்காரணங்களில் கடைசி நேரத்தில் தான் இடம் குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
இது குறித்து நார்வே வெளியுறவுத்துறை துணை அமைச்சர் விடார் ஹெல்ஜெசன் நிருபர்களிடம் கூறுகையில், இந்தப் பேச்சுவார்த்தைகள்மூலம் இலங்கையில் நிரந்தர அமைதிக்கு வழி ஏற்படும். பேச்சுவார்த்தைகளின்போது நிச்சயம் பல இடைஞ்சல்கள், கருத்து வேறுபாடுகள்உருவாகும். ஆனால், இரு தரப்பினரும் அமைதியை எட்டிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது தான் பெரும் நம்பிக்கையைத்தந்துள்ளது என்றார்.
தமிழர் பகுதிகள் சீரமைப்பு:
நீண்ட காலப் போரினால் சீரழிந்துவிட்ட தமிழர் பகுதிகளை சீர் செய்ய இலங்கை முடிவு செய்துள்ளது. பேச்சுவார்த்தைகளுக்குமுன்னதாகவே இந்த மறு கட்டமைப்புப் பணிகள் துவக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைப் பார்வையிடவும் அந்தப் பகுதிகளை சீர் செய்யத் தேவைப்படும் நிதி குறித்து ஆராயவும்பல்வேறு வங்கிகளின் அதிகாரிகள் வரும் திங்கள்கிழமை கிளிநொச்சி செல்கின்றனர்.
திருப்பதியில் ரணில்:
இந் நிலையில் தனிப்பட்ட பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று காலை திருப்பதியில் ஸ்ரீவெங்கடாஜலபதி பெருமானை வணங்கினார். அவரது மனைவி மைத்ரியும் சுவாமி தரிசனம் செய்தார்.
நேற்று காஞ்சி சங்கர மடத்தில் ஸ்ரீ சங்கராச்சாரியைச் சந்தித்த அவர் பின்னர் திருத்தணியில் உள்ள ஸ்ரீ வீரமங்கள ஆஞ்சநேயசுவாமி கோவிலுக்குச் சென்றார். பிரதமர் ஆவதற்கு முன் இங்கு வந்த ரணில் தனது வெற்றிக்காக வேண்டிக்கொண்டதாகத் தெரிகிறது. இப்போது தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்க அவர் மீண்டும் அங்கு சென்றார்.
இதன் பின்னர் திருப்பதி சென்ற ரணிலும் அவரது மனைவியும் அங்கு இரவு தங்கினர். இன்று அதிகாலை வெங்கடாஜலபதியை தரிசித்தஅவர்கள் பின்னர் திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தேவி ஆலயத்துக்கும் சென்றனர்.
இதன் பின்னர் ஹைதராபாத் சென்ற அவர்களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விமான நிலையத்தில் வரவேற்றார். பின்னர்அவர்களுக்கு நாயுடு மதிய விருந்தளித்தார். இதன் ரணிலும் அவரது மனைவியும் மாலை பெங்களூர் செல்கின்றனர். அங்கு கர்நாடகமுதல்வர் கிருஷ்ணாவை அவர்கள் சந்திப்பர்.
நாளை நடக்கும் மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தியின் மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ரணில் கொழும்புதிரும்புவார்.