தமிழக பஸ்சுக்கு தீ வைப்பு: தமிழ்நாடு பஸ்கள் நிறுத்தம்
மைசூர்:
கர்நாடக அமைச்சரை வீரப்பன் கடத்திச் சென்றதையடுத்து மைசூர் அருகே தமிழக பஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் தமிழக பதிவுஎண் கொண்ட பல வாகனங்கள் மீது கல்வீச்சும் நடந்துள்ளது. இதையடுத்து கர்நாடகம் செல்லும் தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டுவிட்டன.
சேலத்தில் இருந்து மைசூர் சென்று கொண்டிருந்த இந்த அரசு பஸ் இன்று அதிகாலை கொள்ளேகால் பகுதிக்கு வந்து கொண்டிருந்தது.அப்போது இதை வழிமறித்த கும்பல் பஸ் மீது பெட்ரோலை ஊற்றியது.
இதையடுத்து பயணிகள் உயிருக்கு அஞ்சி பஸ்சில் இருந்து இறங்கி ஓடினர். அவர்கள் இறங்கிக் கொண்டிருந்தபோதே பஸ்சுக்கு அந்தக்கும்பல் தீ வைத்துவிட்டது.
இதில் அந்த பஸ் முழுவதுமாக எரிந்து நாசமானது. குறைந்த அளவில் பயணிகள் இருந்ததால் அனைவரும் அதிர்ஷ்டவசமாகத்தப்பிவிட்டனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து பெங்களூர் உள்பட கர்நாடகத்துக்குச் செல்லும் தமிழக பஸ்கள் மாநில எல்லைப் பகுதியிலேயேநிறுத்தப்பட்டுவிட்டன. ஏற்கனவே புறப்பட்டுவிட்ட பஸ்கள், லாரிகள், வேன்கள், கார்கள் ஆகியவை ஒசூர், தாளவாடி, பாலாறு,சத்தியமங்கலம் ஆகிய எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுவிட்டன.
தமிழகத்தில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு அதிகாலையில கர்நாடக எல்லையான ஒசூரைத் தொட்ட பஸ்களை அதிகாரிகள் அங்கேயேநிறுத்திவிட்டனர். இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர். அவர்கள் அந்த பஸ்களில் இருந்து இறங்கி கர்நாடக எல்லைக்குநடந்து வந்தனர். அங்கிருந்து பெங்களூர் செல்லும் பஸ்களிலும் வேன்களிலும் ஏறி வந்து சேர்ந்தனர்.
இதையடுத்து ஒசூர்- பெங்களூர் தனியார் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கட்டணத்தையும் சில தனியார் பஸ்கள் அதிகரித்துவிட்டன.இதனால் மக்கள் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.
தமிழக பஸ்கள், லாரிகள்,வேன்கள் வருகை நின்றுவிட்டதால் பெங்களூர்-ஒசூர் நெடுஞ்சாலையே வெறிச்சோடிக் கிடந்தது. இந்தச்சாலையில் செல்லும் வாகனங்களில் பெரும்பாலானவை தமிழகத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை முதல் இந்தச்சாலையில் போக்குவரத்து 90 சதவீதம் குறைந்துவிட்டது.
ஈரோட்டில் இருந்து தாளவாடி வழியாக மைசூர் செல்லும் அனைத்து பஸ்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இந்த பஸ்கள் சாம்ராஜ்நகர்பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. சம்ராஜ்நகரில் பெரும் பதற்றம் நிலவுவதால் அங்கு 144 வது பிரிவின் கீழ் தடையுத்தரவும்போடப்பட்டுள்ளது.
அதே போல ஊட்டி மற்றும் நீலகிரியில் இருந்து பந்திபூர் காட்டுப் பகுதி வழியாக மைசூர் செல்லும் பஸ்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் தாக்கப்படலாம் என்பதால் அவற்றை கர்நாடகத்துக்குள் நுழைய போலீசார் அனுமதிக்கவில்லை.ஆனால், தமிழகத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் கர்நாடக பஸ்கள் அனுமதித்தனர்.
மாலையில் அனுமதி:
காலையில் முன்னெச்சரிக்கையாக தமிழக பஸ்களை போலீசார் தடுத்தாலும் மாலையில் தமிழக பஸ்கள் பெங்களூருக்குள்அனுமதிக்கப்பட்டன. ஆனாலும் பெங்களூர் பஸ்களின் எண்ணிக்கையை தமிழக போக்குவரத்துத்துறை குறைத்துவிட்டது. அதே நேரத்தில்மைசூர், சாம்ராஜ் பேட்டை பகுதிக்கு பஸ்கள் முழுமையாகவே ரத்து செய்யப்பட்டுவிட்டன.
அதே போல முதுமலை காட்டுப் பகுதிக்கும் செல்ல வேண்டாம் என சுற்றுலாப் பயணிகளுக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
பெங்களூரில் தமிழக பதிவு எண் கொண்ட பைக்குகள், கார்களை வைத்திருப்பவர்களும் சிறிது ஜாக்கிரதையாக இருந்து கொள்வது நல்லது.