காட்டுக்குள் செல்ல யாருமே தயாரில்லை: புதிய பிரச்சனையில் அரசுகள்
சென்னை:
வீரப்பனுடன் தூதுவர்களாகச் சென்றவர்கள் மீதெல்லாம் தமிழக அரசு வழக்குப் போட்டு சிறையில் தள்ளிவிட்டதால் இப்போது அவனுடன் பேச்சு நடத்தச் செல்வதற்கு யாரும் தயாராக இல்லை. இதனால், இரு மாநில அரசுகளும் என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டுள்ளன.
வழக்கமாக காட்டுக்குச் செல்லும் நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது வழக்குப் பதிவாகி விசாரணையில் இருந்து வருகிறார். அவரைக் கைதுசெய்ய தமிழக அரசு முயற்சித்து வருகிறது.
நக்கீரன் பத்திரிக்கையின் நிருபர் சிவ சுப்பிரமணியமும் வீரப்பன் விவகாரத்தில் காைதாகி சிறைக்குச் சென்றுவிட்டார்.
கடந்தமுறை ராஜ்குமாரை மீட்க உதவிய கொளத்தூர் மணியும் கைதாகிவிட்டார். அதே போல தமிழர் தேசிய இயக்கத் தலைவர்நெடுமாறனையும் கைது செய்துவிட்டார்கள்.
ராஜ்குமாரை மீட்ட குழுவினரில் இப்போது மிச்சம் இருப்பது பாண்டிச்சேரியைச் சேர்ந்த பேராசிரியர் கல்யாணி, சுகுமாறன், பெங்களூர்தமிழ்ப் பிரமுகர் சண்முகசுந்தரம், பெங்களூர் டாக்டர் பானு ஆகியோர் தான்.
ஆனால், உதவி செய்தவர்களையே கைது செய்து நடவடிக்கை எடுத்ததால் இவர்கள் காட்டுக்குச் செல்வார்களா என்பது சந்தேகம் தான்.
இது குறித்து கல்யாணி, சுகுமாறன் ஆகியோரிடம் கேட்டபோது, அது போன்ற கோரிக்கை ஏதும் யாரிடம் இருந்தும் வரவில்லை.அப்படியே கோரிக்கை வந்தாலும் சிறையில் இருக்கும் பழ.நெடுமாறனுடன் பேசிய பிறகு தான் முடிவு செய்ய முடியும் என்றனர்.
தனக்கு நேர்ந்த கதி இவர்களுக்கும் நேரலாம் என்பதால் நெடுமாறன் இவர்கள் காட்டுக்குச் செல்ல அனுமதிப்பாரா என்று தெரியவில்லை.
சண்முகசுந்தரத்தைப் பொறுத்தவரை புலிகளின் ஆதரவாளர் என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால், கர்நாடகத்தில் பெரிதும் மதிக்கப்படும்தமிழ் பிரமுகர் அவர். இந்த விவகாரத்தில் தலையிட்டு பிரச்சனையில் சிக்கிக் கொள்ள அவர் விரும்புவாரா என்று தெரியவில்லை.
டாக்டர் பானுவைப் பொறுத்தவரை வீரப்பனின் வெறுப்பு லிஸ்டில் இருக்கிறார். ராஜ்குமாரை உடல் நலமில்லாதவர் போல நடிக்கச் செய்துதான் வீரப்பனிடம் இருந்து மீட்டேன் என்று பானுவே பலமுறை பேட்டிகளில் கூறியுள்ளார். வீரப்பனை ஏமாற்றித் தான் என்னை பானுமீட்டார் என ராஜ்குமாரும் கூறியுள்ளார்.
இதனால் டாக்டர் பானுவை காட்டுக்குள் அனுப்புவது சாத்தியமில்லை.