ரஜினியை காட்டுக்கு அனுப்பலாமா? பதில் சொல்ல கருணாநிதி மறுப்பு
சென்னை:
எதற்கெடுத்தாலும் பக்கத்து மாநில முதல்வர்களை குறை கூறும் புதிய பழக்கத்தை ஜெயலலிதா கடைபிடிக்க ஆரம்பித்துள்ளார் என திமுகதலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட நாகப்பாவை மீட்க இரு மாநில அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டும். இரு மாநிலமுதல்வர்களும் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டு பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் உதவியையும் கோரவேண்டும்.
அதைவிட்டுவிட்டு இதற்கு கெம்ப்பையாவை கர்நாடகம் மாற்றியது தான் காரணம் என்று குற்றம் சாட்டிக் கொண்டிருக்கக் கூடாது. இது இருமாநில உறவுகளையும் பாதிக்கும்.
எதற்கெடுத்தாலும் அண்டை மாநில முதல்வர்களை குறை கூறுவது ஜெயலலிதாவுக்கு புதிய வழக்கமாகியுள்ளது. முதலில் அதை நிறுத்தவேண்டும். உருப்படியாக ஏதாவது செய்து நாகப்பாவை மீட்க முயற்சிக்க வேண்டும்.
நிர்வாக வசதிக்காக அதிகாரிகளை ஒரு மாநில அரசு மாற்றுவது ஒன்றும் புதிதல்ல. இது வழக்கமானது தான். இந்த வழக்கான விஷயத்தைக்கூட ஜெயலலிதா விவகாரமாக்குவது தேவையில்லாதது.
மிகச் சிறந்த அதிகாரி, வீரப்பனை பிடித்துவிட்டு தான் இவர் வருவார் என்று ஆட்சியாளர்களால் மெச்சிக் கொள்ளப்பட்ட விஜய்குமாரைஏன் அதிரடிப்படையில் இருந்து தூக்கி சென்னை கமிஷ்னராக்கினார் ஜெயலலிதா? அது மாதிரி கர்நாடக அரசும் நிர்வாகரீதியில் மாற்றம்செய்தால் அதை எப்படி இவர் குறை கூறலாம்.
இரு மாநிலங்களும் பேசாமல் ராணுவத்தின் உதவியைக் கோருவது நல்லது. இந்த விஷயத்தில் முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும்.
வீரப்பனை பிடிக்க முடியாத கருணாநிதியே கைது செய் என்று நான் ஆட்சியில் இருந்தபோது ஜெயலலிதா சொன்னார். ஆனால், நான்அப்படிச் சொல்ல மாட்டேன் என்றார் கருணாநிதி.
வீரப்பனைப் பிடிக்க ரஜினியை அனுப்பலாம் என்ற ராமதாசின் யோசனை குறித்துக் கேட்டபோது, இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கவிரும்பவில்லை என்றார் கருணாநிதி.