ரஜினியும் ராமதாசும் இணைந்து சென்று வீரப்பனை சந்திக்க வேண்டும்: திருமாவளவன்
சென்னை:
வீரப்பனைக் கொல்ல வேண்டும் என்று வீர வசனம் பேசிய ரஜினிகாந்தும், வீரப்பனைத் தொடர்ந்து ஆதரித்து வரும் ராமதாசும் இணைந்துகாட்டுக்குச் சென்று நாகப்பாவை மீட்டு வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொது மக்களின் உயிரையும் அரசின் பணத்தையும் மிச்சப்படுத்தும் வகையில் வீரப்பனின் கோரிக்கைகளை ஏற்று அவனுடன் சமரசம்செய்து கொள்வது தான் நல்லது.
நடிகர் ராஜ்குமாரைக் கடத்தியபோது வீரப்பனை சம்ஹாரம் செய்ய வேண்டும் என்று வீர வசனம் பேசிய ரஜினிகாந்த் இப்போதும் அதேபோல பேச வேண்டும். ஒரு நடிகருக்காக குரல் கொடுத்த அவர் இப்போது கடத்தப்பட்டது அரசியல்வாதிதானே என்று அலட்சியமாகஇருக்காமல் வாயைத் திறக்க வேண்டும்.
ராஜ்குமாரை மீட்க உதவிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனையும் கைது செய்து சிறையில் போட்டாகிவிட்டது. இனியாரை வைத்து நாகப்பாவை மீட்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் தொடர்ந்து வீரப்பனை ஆதரித்து வருகிறார். என்னைக் கேட்டால், பேசாமல் ரஜினியையும்,ராமதாசையும் காட்டுக்கு அனுப்பி வீரப்பனுடன் பேசி நாகப்பாவை மீட்டு வரச் செய்யலாம்.
இவ்வாறு தனது அறிக்கையில் திருமாவளவன் கூறியுள்ளார்.