சிறையில் வைகோ- வைரமுத்து சந்திப்பு
வேலூர்:
பொடா சட்டத்தின் கீழ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை கவியரசு வைரமுத்து சந்தித்துப்பேசினார்.
நேற்று காலை சிறைச்சாலைக்கு வந்த அவர் வெளியே நின்றிருந்த வைகோவின் மகன் மற்றும் மதிமுக நிர்வாகிகளுடன் பேசினர்.
பின்னர் சிறைக்குள் சென்ற அவர் வைகோவுடன் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். தனது கவிதைத் தொகுப்புகள் சிலவற்றையும்அவர் வைகோவிடம் தந்துவிட்டு வந்தார்.
வெளியே வந்த வைரமுத்து நிருபர்களிடம் பேசுகையில், வைகோ என் இனிய நண்பர். இந்தச் சந்திப்பு நட்புரீதியிலானது என்றார்.
முன்னதாக வைகோ சிறையில் அடைக்கப்பட்டபோது அவரை சென்று சந்திக்க திமுக தலைவர் கருணாநிதி தயாரானார். ஆனால், அதை பிறதலைவர்கள் தடுத்துவிட்டனர். இந்தச் செய்தி அறிந்த வைகோ மிகுந்த உணர்ச்சிவசப்பட்டதாகவும் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்ததாகவும் அவரது கட்சி நிர்வாகிகள் கூறி வந்தனர்.
இந் நிலையில் தன்னைச் சந்தித்த கருணாநிதியின் மிக நெருங்கிய நண்பரான வைரமுத்துவிடம் கருணாநிதிக்கு தனது நன்றியைச் சொல்லிஅனுப்பினார் வைகோ.