வைகோவின் சிறைவாசம் செப்- 30ம் தேதி வரை நீட்டிப்பு
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சிறைவாசம்மேலும் 28 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரை செப்டம்பர் 30ம் தேதி வரை சிறையில் வைக்க பொடா நீதிமன்றம் இன்றுஉத்தரவிட்டது.
புலிகளை ஆதரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கடந்த ஜூலை 11ம் தேதி வைகோ கைது செய்யப்பட்டார். அவரை ஆகஸ்ட் 7ம் தேதி வரைசிறையில் வைக்க மதுரை திருமங்கலம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 28 நாள் சிறை வாசத்துக்குப் பின் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி சென்னைபூந்தமல்லியில் அமைக்கப்பட்டுள்ள பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் வைகோ.
அப்போது அவரை மீண்டும் 28 நாட்கள் சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்த தண்டனைக் காலம் இன்றுடன் முடிவடைந்தது.இதையடுத்து இன்று காலை வைகோ பலத்த பாதுகாப்புடன் வேலூர் சிறையில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டார்.
நேராக பூந்தமல்லி பொடா நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்ட அவர் நீதிபதி ராஜேந்திரன் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம்தொடர்ந்து விசாரிக்க வேண்டி இருப்பதால் அவரை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க அனுமதி வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி வைகோவை செப்டம்பர் 30ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து வைகோ மீண்டும்வேலூர் கொண்டு செல்லப்பட்டார்.
வைகோவைக் காண ஏராளமான மதிமுகவினரும் அவரது குடும்பத்தினரும் பூந்தமல்லி பொடா நீதிமன்றம் வந்திருந்தனர். மதிமுகவினரைவைகோவை வாழ்த்தி கோஷம் எழுப்பினர். அவர்களை நோக்கி கையசத்தபடி சிறைக்குத் திரும்பச் சென்றார் வைகோ.
ஜாமீனில் வெளியில் வர மாட்டேன் என்று வைகோ ஏற்கனவே அறிவித்துவிட்டார் என்பது நினைவுகூறத்தக்கது.