வெடித்தது குண்டா?
ஆத்தூர்:
ஆத்தூரில் நடந்த வெடிவிபத்துக்கு பட்டாசுகள் காரணமில்லை, வெடிகுண்டுகள் தான் காரணம் என அப்பகுதி பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்த பயங்கர வெடிவிபத்தில் 21 பேர் வரை உயிரிழந்தனர். இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில் இங்கு வெடிகுண்டுகள் தான் வெடித்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
அப் பகுதி மக்கள் சிலர் கூறுகையில்,
அடிக்கடி இந்த வீட்டில் ஒரு கார் வந்து நிற்கும் அதிலிருந்து பார்சல்களை இறக்கிக் கொண்டு செல்வார்கள். இந்த வீட்டிற்கு இரவு, பகல் பாராமல் அடிக்கடி யாராவது வந்து கொண்டேயிருப்பார்கள்.
வழக்கம் போலவே, நேற்று இரவும் சிவப்பு நிற மாருதி வேன் வந்து நின்றது. அந்த வண்டி வந்த பின்பு தான் விபத்து ஏற்பட்டுள்ளது. சாதாரண பட்டாசுகள் வெடித்திருந்தால் இந்த அளவுக்கு ஒரு தெருவே இடிந்து தரைமட்டமாகி இருக்காது.
மேலும், மாருதி வேனும் சுக்கு நூறாக சிதறி அடையாளமே தெரியாத அளவுக்கு இரும்புத் துகள்களாக மாறி இருப்பதைப் பார்க்கும்போது வேனில் கொண்டு வரப்பட்டது வெடிகுண்டாக இருக்கலாம் என்று தெரிகிறது அவர்கள் கூறினர்.
இதுகுறித்து போலீஸாரும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மீட்பு நடவடிக்கைகள் முடிந்த பிறகே இதுகுறித்து தெளிவாக தெரியவரும்.
வருவாய் அதிகாரி விசாரணைக்கு ஜெ. உத்தரவு
ஆத்தூர் வெடிவிபத்து குறித்து மாவட்ட வருவாய் அதிகாரியின் விசாரணைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000 வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.15,000 வழங்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டார். முதல்வரின் பொது நிவாரண உதவியிலிருந்து இவ்வுதவிகள் அளிக்கப்படவுள்ளன.
தன் சார்பாக தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சரான செம்மலை ஆத்தூர் சென்று மீட்பு நிவாரணப் பணிகளைமேற்பார்வையிடுவார் என்றும் கூறிய ஜெயலலிதா, இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சைஅளிக்குமாறு சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் இவ்விபத்து தொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் இன்று மாலைக்குள் ஒரு அறிக்கை அளிக்க வேண்டும்என்றும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.