ஆத்தூரில் தொடர் வெடி விபத்து: 21 பேர் சாவு
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று நள்ளிரவு நடந்த பயங்கரமான வெடிவிபத்தில் 21 பேர் இறந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இதில் 10 பேரின் நிலைமை மிக மோசமாக உள்ளது.
இந்த வெடி விபத்தில் 25 வீடுகள் தரைமட்டமாகிவிட்டன.
ஆத்தூர் பாரதி தெருவில் இந்த மிக பயங்கர சம்பவம் நடந்தது. அந்த மிகக் குறுகிய தெருவில் வசித்து வந்த ஒரு குடும்பத்தினர் தீபாவளிக்காக அருகில் உள்ள வீடுகளில் சீட்டுப் பிடித்து வந்தனர். தீபாவளி வருவதையொட்டி சீட்டுப் பிடித்தவர்களுக்குக் கொடுப்பதற்காக பட்டாசுகளை அவர்கள் வாங்கி வீட்டில் குவித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் நேற்றிரவு 11 மணிக்கு மேலும் பட்டாசுகளுடன் ஒரு மாருதி வேன் இந்த வீட்டுக்கு வந்தது. பட்டாசுகளை அவர்கள் வீட்டுக்குள் எடுத்துச் சென்றபோது சில வெங்காய வெடி குண்டுகள் கீழே விழுந்தன.
இந்த வெங்காய வெடிகள் வெடித்துச் சிதறின. அப்போது மாருதி வேனில் இருந்த இரு கேஸ் சிலிண்டர்கள் வெடித்தன. (வேன் கேஸ் மூலம் இயங்குவதாகும்). வேனில் இருந்த வெடிகளும் சேர்ந்து வெடித்ததில் வேனின் டீசல் டாங்கும் சிதறி வெடித்தது.
இதில் அந்த வேன் அடையாளமே தெரியாத அளவுக்கு சுக்கல் சுக்கலானது. இதைத் தொடர்ந்து வீட்டுக்குள் இருந்த வெடிகளும் சிதற ஆரம்பித்தன.
அந்தத் தெரு மிகக் குறுகலானது என்பதால் இந்த தொடர் வெடிப்புகளால் அருகருகே இருந்த பல வீடுகள் இடிந்து விழுந்தன. 25 வீடுகள் தரைமட்டமாயின.
இந்த இடிபாடுகளில் சிக்கி வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 21 பேர் உயிரிழந்தர். இதில் 5 பேர் ண்ெகள், 4 பேர் குழந்தைகள்.
சம்பவம் குறித்து அறிந்தவுடன் தீயணைப்புப் படையினர் அங்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். முதலில் அவர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இடிபாடுகளில் சிக்கியிருந்த 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் 6 வீடுகளைச் சேர்ந்தவர்கள் இன்னும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இங்கும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது. விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன், காவல்துறைக் கண்காணிப்பாளர் மாகாளி ஆகியோர் முகாமிட்டு நிவாரணப் பணிகளை நேரில் கண்காணித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சேலம் மற்றும் ஆத்தூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே இங்குள்ள ஒரு வீட்டிலிருந்து 45 கிலோ எடை கொண்ட 15 மூட்டை வெங்காய வெடிகளைபோலீசார் அதிரடியாகக் கைப்பற்றினர். அவற்றை உடனடியாக அருகில் உள்ள ஒரு ஆற்றில் போட்டு செயலிழக்கச்செய்தனர்.