வீரப்பன்: மணியை தூது அனுப்ப கர்நாடகா சம்மதம்
பெங்களூர்:
பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெரியார் திராவிடர் இயக்கத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட 2பேரைத் தன்னிடம் தூதர்களாக அனுப்ப வேண்டும் என்ற வீரப்பனின் கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
இது குறித்து மாநில சட்டத்துறை அமைச்சரான சந்திரேகெளடா இன்று நிருபர்களிடம் கூறுகையில்,
கொளத்தூர் மணிக்கு நீதிமன்றம் ஜாமீன் அளித்தால் மட்டுமே அவர் தூதராக அனுப்பப்படுவார். இருந்தபோதிலும் கொளத்தூர் மணி மீது ஐந்து வழக்குகள் உள்ளதால் அவரைத் தூதராக அனுப்புவது மிக மிகக் கடினம்.
வீரப்பன் கோரியுள்ள மற்றொருவரான கொள்ளேகால் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் பொன்னச்சி மகாதேவசாமிகர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை மீட்பதற்காகக் காட்டுக்குள் தூதராகப் போவதற்குச் சம்மதம்தெரிவித்துள்ளார்.
கொளத்தூர் மணிக்கு ஜாமீன் கிடைக்காத பட்சத்தில் மகாதேவசாமியை மட்டும் வீரப்பன் தூதராக ஏற்றுக்கொள்வானா என்பது சந்தேகமாகவே உள்ளது.
அப்படி ஏற்றுக் கொள்ள வீரப்பன் சம்மதித்தால் அடுத்த ஓரிரு நாட்களில் மகாதேவசாமியை அவனிடம் தூதராகஅனுப்புவோம் என்று சந்திரேகெளடா கூறினார்.
இதற்கிடையே கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களிடம் கூறுகையில்,
கொளத்தூர் மணி தவிர மகாதேவசாமியைத் தான் தூதராக அனுப்ப வேண்டும் என்று அவன் சமீபத்தில்அனுப்பிய கேசட்டில் கேட்டுள்ளான்.
இதுகுறித்த சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து விட்டு, முதல்வர் கிருஷ்ணாவிடமும் பேசுவோம். அதன்பின்னரே யாரைத் தூதராக அனுப்புவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
மகாதேவசாமி தூதராகச் செல்ல விரும்பினால் அவரை காட்டுக்குள் அனுப்புவதற்குத் தேவையான அனைத்துஏற்பாடுகளையும் செய்வோம் என்றார் கார்கே.
கொளத்தூர் மணியை விடுதலை செய்து அடுத்த எட்டு நாட்களுக்குள் அவரைத் தூதராக காட்டுக்குள் அனுப்பவேண்டும் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுப்பிய கேசட்டில் வீரப்பன் கோரிக்கை விடுத்திருந்தான் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொளத்தூர் மணி தாக்கல் செய்துள்ள இரண்டு ஜாமீன் மனுக்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில்நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-->