நாகப்பா கடத்தல்: தூதரை அனுப்ப கர்நாடகம் தீவிர முயற்சி
பெங்களூர்:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கடத்தியுள்ள வீரப்பன் தூதர்களை அனுப்ப வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு விதித்திருந்த காலக்கெடு முடிவடைந்தது. இதையடுத்து தூதரை அனுப்பும் முயற்சிகளை கர்நாடகம் தீவிரமாக்கியுள்ளது.
பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெரியார் திராவிட இயக்கத்தின் தலைவரான கொளத்தூர் மணியையும், ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் கொள்ளேகால் தலைவரான மகாதேவசாமியையும் தூதர்களாகத் தன்னிடம் அனுப்ப வேண்டும் என்று சமீபத்தில் வீரப்பன் கேசட் அனுப்பியிருந்தான்.
கொளத்தூர் மணியை அடுத்த எட்டு நாட்களுக்குள் விடுதலை செய்து மகாதேவசாமியுடன் அவரை தூதராக அனுப்ப வேண்டும் என்றும் இல்லையென்றால் நாகப்பாவைக் கொன்று விடுவேன் என்றும் அந்தக் கேசட்டில் வீரப்பன் எச்சரிக்கை விடுத்திருந்தான்.
ஆனால் சிறைக்குள் இருக்கும் கொளத்தூர் மணியை அனுப்புவதில் ஏராளமான சட்டச் சிக்கல்கள் உள்ளதால் அவரை எப்படித் தூதராக அனுப்புவது என்று கர்நாடக அரசு இன்னும் யோசித்து வருகிறது.
மேலும் கொளத்தூர் மணி விண்ணப்பித்துள்ள இரண்டு ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
இதற்கிடையே வீரப்பனைச் சந்திக்க தூதராகக் காட்டுக்குள் செல்லத் தயார் என்று மகாதேவசாமி கூறியதைத் தொடர்ந்து, அவரை மட்டுமாவது காட்டுக்குள் அனுப்பலாமா என்று கர்நாடக அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் கொளத்தூர் மணியை அனுப்பாமல் மகாதேவசாமியை மட்டும் அனுப்பினால் நாகப்பாவின் உயிருக்கு ஆபத்து நேருமோ என்றும் கர்நாடக அரசு கவலைப்படுகிறது.
இந்நிலையில் வீரப்பன் கேசட்டில் விதித்திருந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.
இந் நிலையில் தூதரை நிச்சயம் அனுப்புவோம் என வீரப்பனுக்குத் தெரிவிக்க கர்நாடகம் முயற்சி எடுத்துள்ளது. வானொலி மூலம் வீரப்பனுக்கு இது தொடர்பான உறுதிமொழி அளிக்கப்படும் என கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
மகாதேவசாமி மூலம் வானொலியில் வீரப்பனுக்கு இங்குள்ள நிலைமை குறித்து விளக்கப்படும். கொளத்தூர் மணியைத் தூதராக அனுப்புவதில் உள்ள சட்டச் சிக்கல்கள் குறித்து அப்போது வீரப்பனிடம் மகாதேவசாமி எடுத்துக் கூறுவார்.
மகாதேவசாமியைத் தனியாகவோ அல்லது வேறு யாருடனாவதோ காட்டுக்குள் தூதராக அனுப்புவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது.
கொள்ளேகாலில் உள்ள மகாதேவசாமி இன்றோ அல்லது நாளையோ பெங்களூர் வருவார். முதல்வர் கிருஷ்ணாவையும் என்னையும் சந்திக்கவுள்ளார். அப்போது அதைப் பற்றி விரிவாகப் பேசுவோம்.
நாகப்பாவை பத்திரமாக மீட்பதற்குத் தேவையான உதவிகளை அளிக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசிடம் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். பெர்னாண்டசும் கிருஷ்ணாவுக்கு இது தொடர்பாக தன்னால் இயன்ற உதவிகளை அளிப்பதாக உறுதியளித்துள்ளார் என்றார் கார்கே.
இதற்கிடையே கர்நாடக அதிரடிப்படையினர் வீரப்பன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டதாகவும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வீரப்பன் அவர்களிடம் பிடிபட்டு விடுவான் என்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீரப்பனால் நாகப்பா கடத்தப்பட்டு 52 நாட்கள் ஆகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-->