காவிரி விவகாரம்: பிரதமருக்கு வைகோ அவசர தந்தி
சென்னை:
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்துவிட கர்நாடக அரசை வற்புறுத்தவேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவசரத் தந்தி ஒன்றைஅனுப்பியுள்ளார்.
பொடா சட்டத்தின் கீழ் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ அனுப்பியுள்ள தந்தியில்,
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத கர்நாடகத்தின் போக்கு மிகவும் கொடுமையானது. கண்டிக்கத்தக்கது.சட்ட விரோதமானதும் கூட.
உரிய காவிரிப் பங்கீட்டு நீரைப் பெறுவதற்கு தமிழகத்திற்கு உரிமை உண்டு. சட்டப்படி கூட இந்த உரிமையைக்கர்நாடகத்தால் தடுக்க முடியாது.
கடந்த 1960 மற்றும் 1970களில் இருந்த மத்திய அரசுகள் அனைத்தும் கர்நாடகத்தில் கபினி, ஹேமாவதி மற்றும்ஹேரங்கி போன்ற அணைகளைக் கட்ட அனுமதி கொடுத்து தமிழகத்திற்குத் துரோகம் செய்து விட்டன.
இதனால் தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா விவசாயிகள் தான் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.இன்னும் பாதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர்.
நாட்டின் ஒற்றுமைக்கு காவிரி விவகாரம் ஒரு முக்கியமான சோதனைக் கட்டமாகும். நம் எதிர்கால சந்ததியினரைமனதில் வைத்துக் கொண்டு பிரதமர் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தத்தந்தியில் கூறியுள்ளார் வைகோ.