காவிரி: பிரதமருக்கு ஜெ. புதிய நிபந்தனை
சென்னை:
காவிரி ஆணையக் கூட்டங்களில் தமிழ்நாடு எதிர்காலத்தில் கலந்து கொள்ள வேண்டுமானால் சில வரைவுத்திட்டங்களை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுதொடர்பாகபிரதமர் வாஜ்பாய்க்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
வாஜ்பாய்க்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடித விவரம்:
காவிரி ஆணையத்தைக் கூட்டச் சொல்லி கர்நாடக அரசு தங்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது. இந்தநேரத்தில் தமிழகத்தின் சார்பில் சில விஷயங்களை தங்களது கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறோம்.
உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகம் தரவில்லை. இதில் எங்களது உரிமையைநாங்கள் எக்காரணம் கொண்டும், யாருக்காகவும் விட்டுத் தர மாட்டோம். கோர்ட்டிலும் போராடுவோம்,கோர்ட்டுக்கு வெளியிலும் போராடுவோம்.
காவிரிப் பிரச்சினையில் தாங்கள் (பிரதமர்) நடந்துகொள்ளும் விதத்தில் தமிழகத்திற்கு உடன்பாடில்லை. காவிரிநதி நீர் விவகாரத்தில், கர்நாடகம் நடந்து கொள்ளும் விதம், ஆணையத் தலைவர் என்ற முறையில் தங்களுக்கும்,பிற உறுப்பினர்களான கேரள மற்றும் பாண்டிச்சேரி முதல்வர்களுக்கும் தெளிவாகத் தெரியும்.
எந்த நோக்கத்திற்காக இந்த ஆணையம் ஏற்படுத்தப்பட்டதோ அந்தப் பணியை ஆணையத்தால் சரிவர செய்யமுடியவில்லை.
கர்நாடகத்திற்கு ஆதரவாகவே பல முறை இந்த ஆணையம் முடிவெடுத்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுகளை,காவிரி ஆணையக் கூட்டத்தைக் கூட்டி முடிவுகளை மாற்றிக் கொள்ளலாம் என்ற தைரியத்தால்தான் உச்சநீதிமன்றஉத்தரவுகளை கடைப்பிடிக்க மறுக்கிறது கர்நாடகம்.
தற்போதைய காவிரிப் பிரச்சினையில் 3 முறை காவிரி ஆணையம் கூட்டப்பட்டது. அந்த மூன்று கூட்டங்களிலும்தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. இதில் பிரதமரான உங்களது செயல்பாடு தமிழக மக்களுக்குபெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றம் மூலம் தான் எங்களுக்கு நியாயம் கிடைத்தது.
காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டியதுதான் காவிரி ஆணையத்தின் கடமை. இதில்நீரின் அளவைக் குறைக்கவோ, கூட்டவோ உங்கள் தலைமையிலான ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை.
ஆனால் கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்று அவ்வப்போது தமிழகத்திற்கு பாதகமாக ஆணையம் நடந்துகொள்வதால், இந்த ஆணையத்தின் மீது தமிழக அரசுக்கும், மக்களுக்கும் நம்பிக்கை போய் விட்டது.
ஆனால், ஆணையத்தின் கூட்டத்தை அடிக்கடி கூட்டச் சொல்லி கர்நாடகம் வற்புறுத்தி வருகிறது. இதில் கலந்துகொண்டு தமிழகம் தனது கருத்தைக் கூறினால் அது ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
எனவே வருங்காலத்தில் ஆணையக் கூட்டங்களில் தமிழகம் கலந்துகொள்ள வேண்டுமானால், ஆணையம் எப்படிச்செயல்பட வேண்டும் என்று சில குறைந்தபட்ச வரைவுத் திட்டங்களை நடைறைப்படுத்தினால் மட்டுமே, தமிழகஅரசு கலந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்க விரும்புகிறேன்.
- ஆணையக் கூட்டத்தில் கர்நாடக அரசு என்ன கோரிக்கைகள், உறுதிமொழிகளை வைக்க விரும்புகிறதோ அதை தெளிவாகவும், எழுத்துப்பூர்வமாகவும் முன்பே தெரிவிக்க வேண்டும். உங்களிடம் தரப்படும் இந்த கோரிக்கையின் நகல் தமிழகத்திற்கு கூட்டத்துக்கு முன்பாகவே வழங்கப்பட வேண்டும்.
- கர்நாடக அரசு கூறும் வாதங்களை படித்துப் பார்த்து பதில் தெரிவிக்க தமிழக அரசுக்கு 3 நாள் அவகாசம் கொடுக்க வேண்டும்.
- தமிழகம் தரும் பதில் குறித்து ஆட்சேபனை தெரிவிக்க கர்நாடகம் விரும்பினால், அதுவும் எழுத்துப்பூர்வமாகவே தமிழகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். அதை பரிசீலித்துப் பதில் தர தமிழகத்திற்கு மேலும் 3 நாள் அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
- இந்த நடைறைகள் ஒரு வாரத்தில் முடிந்த பிறகே ஆணையத்தின் கூட்டம் கூட்டப்பட வேண்டும். அதைவிட்டுவிட்டு நீங்கள் அவசரமாய் கூட்டும் ஆணையக் கூட்டத்தில் எந்த விவரமும் தெரியாமல் நாங்கள் கலந்து கொண்டு கர்நாடகம் சொல்வதற்கு தலையாட்டிக் கொண்டிருக்க முடியாது.
- இதுதொடர்பாக பிற மாநிலங்கள் ஏதேனும் கருத்துத் தெரிவிக்க விரும்பினால் அதற்கும் 3 நாள் அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
காவிரி ஆணையக் கூட்டங்களில் அனைத்து மாநிலங்களுக்கிடையேயும் ஒத்த கருத்த எட்டப்பட வேண்டும் என்றுமத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கூறியுள்ளார். ஆனால் ஒரு முறை கூட அப்படி நடந்ததில்லை.
ஆணையக் கூட்ட விவரங்களை செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது அனைத்து உறுப்பினர்களும் உடன்இருக்க வேண்டும். ஆனால் ஒரு முறை கூட உறுப்பினர்கள் இருந்ததில்லை. நாங்கள் வந்த பிறகு இல்லாதையும்பொல்லாததையும் பத்திரிக்கைகளிடம் தெரிவிக்கிறீர்கள்.
இதுவரை சுப்ரீம் கோர்ட் உத்தரவையும் ஆணையத்தின் உத்தரவுகளையும் கர்நாடகம் அமல்படுத்தாத காரணத்தால்தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தையும் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்கூறியுள்ளது.
இதை கருத்தில் கொண்டு ஆணையக் கூட்டங்கள் நடந்தால்தான் அதில் கலந்து கொள்வதில் ஏதாவது அர்த்தம்இருக்கும். கூட்டம் சுமூகமாகவும் நடக்கும்.
ஆணையக் கூட்டங்களை நடத்துவதற்கு முறையான வரைவுத் திட்டங்கள் கூட இதுவரை இல்லை. எனவேகுறைந்தபட்சம் இந்தத் திட்டங்களாவது இருந்தால்தான் அந்தக் கூட்டங்களில் தமிழக அரசினால் எதிர்காலத்தில்கலந்து கொள்ள முடியும்.
இவ்வாறு வாஜ்பாய்க்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
ஆணையத்தில் உறுப்பினர்களாக இருக்கும் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, கேரள முதல்வர் அந்தோணி,பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோருக்கும் இந்தக் கடிதத்தின் நகல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகஜெயலலிதா கூறியுள்ளார்.
பா.ம.க. கோரிக்கை:
காவிரி ஆணையத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது அவசியம் என்று ஜெயலலிதா கருதினால் முதலில் அது தொடர்பாக தமிழகத்தில் அனைத்துக் கட்சிக்கூட்டத்தைக் கூட்டி விவாதித்து அனைவரையும் ஆதரவையும் பெற அரசு முயல வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில் கர்நாடகத்தைப் போல தமிழகத்திலும் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை ஜெயலலிதா எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.