ஜெவுடன் நாகப்பாவின் குடும்பத்தினர் சந்திப்பு
சென்னை:
வீரப்பனிடம் இருந்து நாகப்பாவை மீட்க உதவுமாறு அவரது குடும்பத்தினர் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துக்கோரிக்கை விடுத்தனர்.
நாகப்பா கடத்தப்பட்ட 72 நாட்களாகிவிட்டன. கொளத்தூர் மணியை தூதுவராக அனுப்புமாறு வீரப்பன் கோரியுள்ளான். மணிக்கு ஜாமீன்கிடைக்காவிட்டால் கர்நாடக அமைச்சர் ராஜூ கெளடாவை அனுப்புமாறு கூறியுள்ளான்.
அதே நேரத்தில் முதலில் இரு மாநில அதிரடிப் படைகளின் செயல்பாட்டையும் நிறுத்தக் கூறியுள்ளான். ஆனால், இதை தமிழக அரசு ஏற்கமறுத்துவிட்டது. தொடர்ந்து தமிழக அதிரடிப்படை தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.
இதனால் தூது முயற்சிகளும், பேச்சுவார்த்தைகளும் பாதிக்கப்படுவதாக நாகப்பாவின் குடும்பத்தினர் கருதுகின்றனர். அதிரடிப்படையின்தேடுதல் வேட்டையை நிறுத்துமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர்.
இந் நிலையில் இன்று நாகப்பாவின் மனைவி பரிமளா, மகள் பவன், மகன் ப்ரீதம், மருமகன் கிரண் படேல் ஆகியோர் தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தனர். சுமார் 30 நிமிடங்கள் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். வீரப்பனிடம் இருந்துதனது கணவரை மீட்க உதவுமாறு ஜெயலலிதாவிடம் பரிமளா கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய மகள் பவன், ராஜ்குமாரை மீட்க உதவியதுபோல எனது தந்தையை மீட்கவும் முழு அளவில் உதவவேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். சட்ட நிபுணர்களுடன் பேசிவிட்டு எங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்வதாகமுதல்வர் உறுதியளித்தார்.
மணிக்கு ஜாமீன்: கர்நாடகம் எதிர்ப்பு:
இந் நிலையில் கர்நாடகத்தில் பல வழக்குகளில் கைதாகி சிறையில் இருக்கும் கொளத்தூர் மணிக்கு 2 வழக்குகளில் ஜாமீன்தரப்பட்டுவிட்டது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மணிக்கு ஜாமீன் தருவதில் ஆட்சேபணை இல்லை என்றுதெரிவித்ததால் நீதிமன்றங்கள் ஜாமீன் தந்தன.
இந் நிலையில் இன்னொரு வழக்கில் உயர் நீதிமன்றத்தில் மணி ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளார். இதன் மீதான விசாரணை நாளைநடக்கிறது. அப்போது, நீதிமன்றத்தில் இந்த ஜாமீனை அரசு எதிர்க்கும் என சட்ட அமைச்சர் சந்திரே கெளடா கூறினார்.