பண்ருட்டி அருகே மீண்டும் கள்ளச் சாராயம்?- அளவுக்கு மீறி குடித்து பார்வை இழந்த ரிக்ஷாக்காரர்
கடலூர்:
பண்ருட்டி அருகே அளவுக்கு மீறி சாராயம் அருந்திய ஒரு ரிக்ஷா ஓட்டுநரின் கண் பார்வை பறி போனது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ்.
ரிக்ஷா ஓட்டுநரான இவர் சமீபத்தில் விழுப்புரத்தில் உள்ள ஆனத்தூர் என்ற இடத்தில் சாராயம் குடித்தார்.அளவுக்கு மீறி அதிகமாக சாராயம் குடித்து விட்டு தன் வீட்டுக்கு வந்தார் அவர்.
அன்று இரவு அவரது கண்களில் அதிக எரிச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து வலியும் வரவே, உடனடியாக அவரைபண்ருட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
பின்னர் கடலூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கும் அவருடைய நிலைமை மோசமாகவே,பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் தேவராஜ்.
ஆனால் அவரிடம் போதிய பணம் இல்லாததால், ஜிப்மர் மருத்துவமனையில் அவரைச் சேர்க்க முடியவில்லை.இதை அறிந்த போலீஸார் விரைந்து வந்து அவர் ஜிப்மர் மருத்துவனையில் சேர உதவினர்.
இருப்பினும், தேவராஜின் கண் பார்வை முற்றிலும் போய் விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவர் குடித்தசாராயம் விஷத் தன்மை பொருந்தியதால் தான் கண் பார்வை பறிபோயுள்ளதாகவும் டாக்டர்கள் கூறினர்.
இதையடுத்து ஆனத்தூர் பகுதிக்கு போலீஸார் விரைந்துள்ளனர். அங்கு கள்ளச் சாராயம் விற்கப்பட்டிருக்கலாம்என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
இதற்கிடையே நேற்று இரவு ஆனத்தூரில் கள்ளச் சாராயம் குடித்த மேலும் 22 பேருக்கு வாந்தி, மயக்கம்ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக பாண்டிச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ஐந்துபேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் செம்மலையும், சம்பத்தும் நேரில் சென்றுபார்த்து உடல் நலம் விசாரித்தனர்.
இந்நிலையில் கள்ளச் சாராயம் விற்ற 8 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதத்தில் இதே பண்ருட்டி பகுதியில் தான் கள்ளச் சாராயம் குடித்து சுமார் 50 பேர்உயிரிழந்தனர் என்பதும் 100க்கும் அதிகமான மக்கள் பார்வை இழந்தனர் என்பதும் நினைவிருக்கலாம்.
-->