நிதி நிறுவன மோசடி: 2 பேருக்கு 6 ஆண்டு கடுங்காவல்
சென்னை:
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நிதி நிறுவனம் நடத்தி முதலீட்டாளர்களின் ரூ.16 லட்சம் பணத்தை மோசடிசெய்த 2 பேருக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் உத்தரவிட்டார்.
முதலீட்டாளர்கள் பாதுகாப்புக்கான சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியான ஆதிநாதன் தனது தீர்ப்பில்,
குற்றம் சாட்டப்பட்ட உத்தமபாளையம் ஸ்ரீபுவனேஸ்வரி பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ராமநாதன் மற்றும்ராஜசேகரன் ஆகியோர் மீதான புகார்களை வாய்மொழியாகவும், ஆதாரப்பூர்வமாகவும், ஆவணங்கள்மூலமாகவும் அரசுத் தரப்பு நிரூபித்துள்ளது.
எனவே குற்றவாளிகள் இருவருக்கும் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது.
அத்தோடு இருவரும் தலா ரூ.60,000 அபராதத் தொகையும் கட்ட வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
கடந்த 1998ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை மொத்தம் 156 முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.16 லட்சம்பணத்தை மோசடி செய்து விட்டு இருவரும் தலைமறைவாகி, பின்னர் பிடிபட்டனர்.
இவ்வழக்கில் சரஸ்வதி, சுசீலா, குருகோபிநாத், புவனேஸ்வரி ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
-->