நீர் திறந்து விட முடியாது: கர்நாடகம் மீண்டும் பிடிவாதம்
சென்னை:
வரும் 29ம் காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக அரசு மீண்டும் கூறிவிட்டதைத் தொடர்ந்துகாவிரிப் பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்று தெரிகிறது.
டெல்லியில் மத்திய நீர்வளத் துறை செயலாளர் ஏ.கே. கோஸ்வாமி தலைமையில் நடைபெற்ற காவிரிகண்காணிப்புக் குழு கூட்டத்தின் போது கர்நாடக அரசு இந்த முடிவை உறுதியாகத் தெரிவித்து விட்டது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று இம்மாதத் துவக்கத்தில் ஓரளவு நீரைக் காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விட்டகர்நாடக அரசு சில நாட்களுக்கு முன்னர் அதையும் நிறுத்தி விட்டது. அவ்வப்போது பெய்து வரும் மழைமூலமாகத் தான் தற்போது மேட்டூர் அணைக்கு கொஞ்சம் கொஞ்சமாக நீர் வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணையில் தற்போது 27 டி.எம்.சி. நீர் மட்டுமே உள்ளது. இதில் 22 டி.எம்.சி. நீரை மட்டுமே பயன்படுத்தமுடியும்.
தற்போது துவங்கியுள்ள சம்பா சாகுபடியோ வரும் பிப்ரவரி மாத இறுதி வரை நடைபெறும். இதற்கு மொத்தம் 70டி.எம்.சி. நீர் தேவைப்படும்.
எனவே மேட்டூர் அணைக்கு கர்நாடக அரசு நீரைத் திறந்து விட வேண்டும் என்று காவிரி கண்காணிப்புக் குழுக்கூட்டத்தில் தமிழக அரசு கேட்டுக் கொண்டது.
ஆனால் கர்நாடக அணைகளில் 57 டி.எம்.சி. நீர் மட்டுமே உள்ளதாகவும், இதிலும் 34 டி.எம்.சி. நீரை மட்டுமேபயன்படுத்த முடியும் என்றும் கர்நாடக அரசு கூறியது.
மேலும் கர்நாடக விவசாயிகளுக்கே இந்த நீர் பற்றாக்குறையாக உள்ளது என்றும் இதனால் தமிழகத்திற்கு நீர்திறந்துவிடப்படாது என்றும் கர்நாடக அரசு கூறிவிட்டது.
இந்தப் பற்றாக்குறை பங்கீட்டு அளவின் படி டிசம்பர் மற்றும் ஜனவரிக்கு 40 சதவீதமும், பிப்ரவரி மாதம் 20சதவீதமும் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டும் கூட கர்நாடக அரசு அதை மறுத்துவிட்டது.
"இரு தரப்பினரும் இப்படியே மாறி மாறிப் பேசிக் கொண்டிருந்தால் என்ன செய்வது? இருவரும் விட்டுக்கொடுத்து ஏதாவது ஒரு முடிவுக்கு வாருங்கள்" என்று கோஸ்வாமி கூறினார்.
ஆனாலும் இரு தரப்பினரும் தங்கள் முடிவில் பிடிவாதமாக இருந்ததைத் தொடர்ந்து, நேற்றைய காவிரிகண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை.
பின்னர் நிருபர்களிடம் பேசிய கோஸ்வாமி, இந்தக் கூட்டம் குறித்து பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரிநதி நீர் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் இது குறித்து வாஜ்பாய் ஒரு முடிவை அறிவிப்பார்என்றும் கூறினார்.
கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர், பொதுப்பணித் துறைசெயலாளர் குற்றாலிங்கம் ஆகியோரும், கர்நாடக அரசின் சார்பில் அதன் தலைமைச் செயலாளர் ரவீந்திராவும்,பாண்டிச்சேரி தலைமைச் செயலாளர் பத்மநாபனும், கேரள தலைமைப் பொறியாளரும், மத்திய நீர்வளக் கமிஷன்தலைவர் ஜெயசீலனும், காவிரி நிபுணர் மோகனகிருஷ்ணனும் கலந்து கொண்டனர்.
-->