நாகப்பாவை வீரப்பன் கொன்றிருக்க மாட்டான்: ராஜ்குமார்
பெங்களூர்:
நாகப்பாவை வீரப்பன் கொன்றிருக்க வாய்ப்பில்லை என்று அவனால் முன்பு கடத்திச் செல்லப்பட்ட நடிகர் ராஜ்குமார் கூறினார்.
நாகப்பாவின் மரணத்தையடுத்து பெங்களூரில் நிருபர்களிடம் ராஜ்குமார் கூறியதாவது:
நாகப்பாவுக்கு இப்படிப்பட்ட கொடுமையான முடிவு ஏற்பட்டிருக்கக் கூடாது. இந்த துயரத்தைத் தாங்கும் சக்தியை ஆண்டவன் தான்நாகப்பா குடும்பத்துக்கு தர வேண்டும். ஆனால், இப்படி சொல்வது எளிது. ஆனால், உண்மையில் அந்த துயரத்தை அனுபவிக்கும்நாகப்பாவின் குடும்பத்துக்குத் தான் அந்த வலி தெரியும்.
சந்தனக் கடத்தல் வீரப்பனை விடக் கூடாது. அவன் சாக வேண்டும். அவனால் யாருக்கு என்ன லாபம்?. நாடு நல்லா இருக்கவேண்டுமென்றால் இப்படிப்பட்ட துரோகிகள் இருக்கக் கூடாது.
வீரப்பன் விஷயத்தில் அரசு சும்மா இருக்கக் கூடாது. அவன் கதையை முடிக்க வேண்டும். இந்த நேரத்தில் பிரிட்டிஷ் ஆட்சியை நினைத்துப்பார்க்கிறேன். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கொன்றுவிடுவார்கள். அவர்களை விட்டு வைக்கவே மாட்டார்கள்.
பெங்களூரில் அங்கு கலாட்டா, இங்கு கலாட்டா என்று செய்திகள் வருகின்றனர். இப்படிச் செய்பவர்களையும் அழிக்க வேண்டும்,இப்படிப்பட்ட செயல்களால் நாட்டுக்கு என்ன நன்மை?.
நாகப்பாவை வீரப்பன் கொன்றிருக்க மாட்டான் என்று தான் நினைக்கிறேன். ஏனென்றால், நாகப்பாவைக் கொல்வதால் வீரப்பனுக்கு என்னலாபம்?. ஆனால், நாகப்பா கொல்லப்பட்ட விஷயத்தில் யார் சொல்வதைத் தான் நம்புவது என்று தெரியவில்லை.
வீரப்பனின் காடு மிக பயங்கரமானது. அங்கு இருந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். அங்கு தண்ணீர் கிடைக்காது. குளிர் கொல்லும்.மிக மோசமான காட்டுப் பகுதி அது என்றார் ராஜ்குமார்.
நாகப்பா மரணம் குறித்துப் பேசும்போது ராஜ்குமார் கண் கலங்கினார்.
நாகப்பாவை வீரப்பன் கொன்றிருக்க வாய்ப்பில்லை என்று ராஜ்குமார் கூறியுள்ளது கர்நாடகத்தில் அதிர்ச்சியைப் பரப்ப வாய்ப்புள்ளது.
-->