இலங்கை சிறைகளிலிருந்து 44 தமிழக மீனவர்கள் விடுதலை
யாழ்ப்பாணம்:
இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டு அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 44 தமிழக மற்றும் பாண்டிச்சேரி மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த அக்டோபர் மாதம் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சில மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து விட்டதாகக் கூறி அந்நாட்டுக் கடற்படையினர் அவர்களைக் கைது செய்தனர். மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல் பாண்டிச்சேரியைச் சேர்ந்த சில தமிழ் மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களும் அந்நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் வைக்கப்பட்டனர். மொத்தம் 62 மீனவர்கள் வரை கைது செய்யப்பட்டனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிறைகளில் வாடி வந்த இம்மீனவர்களை மீட்பதற்காக இந்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது.
இந்நிலையில் இலங்கையில் உள்ள பருத்தித் துறை மற்றும் நீர்க்காவல் துறை நீதிமன்றங்களில் 62 மீனவர்களும் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்களில் 44 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். அவர்களை இந்தியக் கடற்படையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை கடற்படைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மீதமுள்ள 18 மீனவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-->