நெடுமாறனை விடுவிக்க சர்வதேச மனித உரிமை அமைப்புக்கு இலங்கை எம்.பிக்கள் கடிதம்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சர்வதேச மனித உரிமை அமைப்பான "ஆம்னெஸ்டி இன்டர்நேஷனலு"க்கு இலங்கை தமிழ் எம்.பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் கூறி கடந்த ஆகஸ்டு 1ம் தேதி நெடுமாறனை தமிழக அரசு கைது செய்தது. மேலும் அவருடைய தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த சுப. வீரபாண்டியன், பாவாணன் மற்றும் தாயப்பன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி "ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்" அமைப்புக்கு இலங்கையின் தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தின் விவரம்:
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான நெடுமாறன், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவராகவும், தமிழக மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார்.
நெடுமாறனும் அவருடைய கட்சி நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டு நூறு நாட்களுக்கு மேலாகிவிட்டது.
அவர்களை உடனடியாக விடுதலை செய்ய "ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்" முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் தமிழர் தேசிய இயக்கத்தின் மீதான தடையை நீக்கவும் உதவ வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில் சம்பந்தன், சேனாபதிராஜா, சந்திரசேகர், பொன்னம்பலம், நடராஜா ரவிராஜ், துரைரத்தின சிங்கம், அடைக்கலநாதன், ஜோசப் பரராஜசிங்கம், கிருஷ்ண பிள்ளை, சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட எம்.பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
நெடுமாறன் சிறைவாசம் நீட்டிப்பு:
இதற்கிடையே நெடுமாறனின் காவல் அடுத்த மாதம் 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அவரும் அவருடன் கைது செய்யப்பட்ட சுப.வீரபாண்டியன், பாவாணன், தாயப்பன் ஆகிய 3 பிரமுகர்களும் நேற்று பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது அரசு வழக்கறிஞர், இந்த நால்வரின் காவலையும் நீட்டிக்க வேண்டும் என்றார். பழ.நெடுமாறனின் வழக்கறிஞர், கோர்ட் என்ன நினைக்கிறதோ அதைச் செய்யலாம் என்றார்.
இதையடுத்து நெடுமாறன், பாவாணன் மற்றும் சுப.வீரபாண்டியனின் காவலை வரும் ஜனவரி 13ம் தேதி வரை நீட்டிப்பதாக நீதிபதி அறிவித்தார். தாயப்பனின் காவலை இம்மாதம் 27ம் தேதி வரையும் நீட்டித்தார்.
-->