லெபனான்.. துருக்கி.. ஈரான்.. பாகிஸ்தான் சிறை: கடலூர் இளைஞரின் துயரக் கதை
கடலூர்:
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்ற வாலிபர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டு வாடி வருகிறார். அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் (25). இவருக்கு லெபனான் நாட்டில் தையல் வேலை கிடைத்தது. 4 ஆண்டுகள் பணிபுரிந்த அவர் சொந்த ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் லெபனான் சென்றார்.
அங்கிருந்து இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாக ஒரு ஏஜென்ட் இவரிடம் ரூ. 1.2 லட்சம் வாங்கினார். ஆனால், துருக்கி நாட்டுக்குள் அழைத்துச் சென்று அங்கேயே விட்டுவிட்டு அந்த ஏஜென்ட் ஓடிவிட்டார்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்ததால் துருக்கி போலீசாரால் ரஜினி கைது செய்யப்பட்டார். தனது நிலையை அவர் விளக்கிய பின்னர் உடனே நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டனர். இதையடுத்து இந்தியா திரும்ப முடிவு செய்த ரஜினி அங்கிருந்து பஸ்களிலும், வேன்களிலும் பயணம் செய்து ஈரானுக்குள் நுழைந்தார்.
ஈரான் அதிகாரிகள் இவரை விசாரித்துவிட்டு பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 2001ம் ஆண்டு செப்டம்பரில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்திய தூதரகத்திடம் போய் தனது நிலையை சொல்லி அழுதார்.
இதையடுத்து அவருக்கு பாஸ்போர்ட் மற்றும் பயணத்துக்கான ஆவணங்களைக் கொடுத்து இந்தியாவுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். ரஜினியும் டெல்லிக்கு வரும் ரயிலில் ஏறினார்.
ஆனால், இந்திய- பாக் எல்லையில் இவரது உடமைகளை சோதனையிட்ட பாகிஸ்தான் அதிகாரிகள் இவரை சிறைப் பிடித்தனர். இப்போது ரஜினி லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சிறையில் இருந்தபடியே பல கடிதங்களை ரஜினி அனுப்பி விட்டார்.
இவரை மீட்கக் கோரி இவரது ஏழைப் பெற்றோர்கள் குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர், கவர்னர், மாவட்ட எம்.பி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ. என அனைவருக்கும் கோரிக்கை மனுக்களை அனுப்பியும் இதுவரை எந்தப் பலனும் இல்லை.
சமீபத்தில் ரஜினி எழுதிய கடிதத்தில், என்னை ஒப்படைக்க பாகிஸ்தான் முன் வந்தது. ஆனால், என்னை ஏற்க இந்திய அரசு அதிகாரிகள் மறுத்துவிட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இவரை மீட்க உதவக் கோரி இவரது பெற்றோரும் உறவினர்களும் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன் கண்ணீருடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
ஏழையின் அழுகுரல் மத்திய, மாநில அரசுகளின் செவிட்டுக் காதுகளில் விழுமா?
-->