செல்வராஜ் கொலை வழக்கில் 4 அல்-உம்மா தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் போக்குவரத்து போலீஸ்காரர் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 அல்-உம்மா தீவிரவாதிகளுக்கும்தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனையையடுத்து கோவை நகரில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல பகுதிகளில் 144 தடை உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் உக்கடம் காவல் நிலையத்தைச் சேர்ந்த செல்வராஜ் கடந்த 1997ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி பணியில்ஈடுபட்டிருந்தார். அப்போது 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய செல்வராஜ் அபராதம்விதித்தார். இதையடுத்து அவருக்கும் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்து சென்ற அந்த 3 வாலிபர்களும் பெரும் கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு வந்தனர். காவலர் செல்வராஜைநடுரோட்டிலேயே வைத்து கண்டந்துண்டமாக வெட்டிக் கொன்றனர்.
இதையடுத்து ஏற்பட்ட வன்முறை மதக் கலவரமாக மாறியது. பஸ்கள் எரிக்கப்பட்டன, கடைகளும் வீடுகளும்சூறையாடப்பட்டன. இந்த வன்முறையை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக கோயம்புத்தூரில் 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தொடர் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.அதில் 58 பேர் பலியாயினர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
இந்த காவலர் செல்வராஜ் கொலை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தக்கொலையில் தொடர்புடைய அல்-உம்மாவின் தலைவர் பாட்சாவின் மகன் சித்திக் அலி, அல்-உம்மா பொதுத் செயலாளர் முகம்மத்அன்சாரி உள்பட 9 பேரைக் கைது செய்தனர்.
இதில் ஷாகுல் ஹமீத் என்பவர் சிறையிலேயே இறந்துவிட்டார். மற்ற 8 பேர் மீதும் கோவை இரண்டாவது விரைவு நீதிமன்றத்தில்விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பிரேம் குமார் இந்த 8 பேருமே குற்றவாளிகள் தான் என்று வெள்ளிக்கிழமைதீர்ப்பளித்தார்.
இன்று (திங்கள்கிழமை) இவர்களுக்கான தண்டனைகள் வழங்கப்பட்டன. இதற்காக இந்த 8 பேரும் இன்று பலத்த பாதுகாப்புடன்நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டனர்.
தண்டனை வழங்கி தீர்ப்பு:
தனது தீர்ப்பில் நீதிபதி பிரேம் குமார் கூறியதாவது:
செல்வராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான முகம்மது சபி, அபா, ஆசிக், அபுதாகிர் ஆகிய 4 பேருக்கும் தூக்குதண்டனை விதிக்கப்படுகிறது.
இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த சித்திக் அலி, முகம்மது அன்சாரி, சம்சுதீன், தடா அஸ்லாம் ஆகிய 4 பேருக்கும் ஆயுள்தண்டனையும் தலா ரூ. 25,000 அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு தண்டனைவழங்கப்படும்.
மதரீதியில் மக்களையும், கோவையையும் இரண்டாகப் பிளக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே குற்றவாளிகள் இந்த செயலைசெய்திருக்கிறார்கள். பணியில் இருந்த காவலரை ஈவு இரக்கமின்றி இவர்கள் கொலை செய்துள்ளனர். இவர்களுக்கு தயவுதாட்சன்யம் காட்டக்கூடாது.
இந்த தண்டனையை எதிர்த்து இவர்கள் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்ய 30 நாட்கள் அவகாசம் தருகிறேன்என்றார் நீதிபதி.
தண்டனை அறிவிக்கப்பட்டதையடுத்து குற்றவாளிகள் 8 பேரும் கோவை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தண்டனையையடுத்து கோவை நகரில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல பகுதிகளில் 144 தடை உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு வழங்கிய நீதிபதி பிரேம் குமாருக்கு ஏற்கனவே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-->